செவ்வாய், 20 ஜூன், 2017

தமிழ் சினிமா பிரிந்தவர் இணையும் பாடல்கள் -ஒரு துளி

பிரிந்தவர் கூடினால் கண்ணீர்  தான்  அங்கு மொழி  என்று சொல்வது உண்டு ..

தமிழ்  சினிமா  ஆரம்ப காலத்தில்  இருந்தே பிரிந்தவர் சேரும்  காட்சிகள்  நிறைய  உண்டு . அதுவும்  பாடலால்  இணையும்  காட்சி கள்  பல,  இது  போன்ற   காட்சிகளில் நடிப்பை  விட , பாடல்வரிகள் மற்றும்  பாடலின் பின்னணி இசைதான் காண்பவருக்கு  ஆனந்த கண்ணீரை  வரவழைக்கும் சக்தி  உடையது .


எனக்கு  மிகவும்  பிடித்த   அத்தகைய பாடல்களில்   ஒன்று ,
நாளை  நமதே  படத்தில்  வரும்  அன்பு  மலர்களே, நாளை  நமதே தாய்  வழி  வந்த  தங்கங்கள்  எல்லாம் ஓர் வழி  நின்று  நேர் வழி  சென்றால்  நாளை  நமதே பாடல் ,
தம்பி  பிரிந்து போன  சகோதரர்களை  பாடலை  பாடி  கண்டுபிடிப்பார், SPB  தம்பி  வேடத்தில்  நடித்தவருக்கும் , TMS  புரட்சி  தலைவருக்கும்  பின்னணி கொடுத்து  இருப்பார்கள்.

வருட  கணக்கில் பிரிந்த   சகோதரர்கள்  சேர்ந்தால்   முதலில் நலம் விசாரித்து கொள்வார்களா இல்லை  பாடலை  முழுதாக  பாடி முடிப்பார்களா என்ற  கேள்வி  எழாமல்  உங்களை  மயங்க  வைப்பதுதான்   திரைப்படத்தின்  மேஜிக் ...

90 களில்   சூப்பர்  குட்  பிலிம்ஸ்  காலத்தில்  இத்தகைய  காட்சிகளும்  பாடல்களும்  அதிகம்.



உதாரணமாக
நான் பேச  நினைப்பதெல்லாம்  படத்தில் ஆனந்த் பாபு  , மோகினி  இணையும்  ஏலேலம்  கிளியே  பாடல்....
(இதிலும்  ஜேசுதாஸ்   குரலில் முதலில் பாடிய  பாடலை  இறுதி  காட்சியில்  மனோ  பாடி இருப்பார் , யாரும்  அதை  பொருட் படுத்தவில்லை..)

துள்ளாத   மனமும்  துள்ளும்  படத்தில்  விஜய் , சிம்ரன்  இணையும் இன்னிசை பாடி  வரும்  பாடல் .

புது வசந்தம்  படத்தில்  வரும் சித்தாரா  நண்பர்களுடன்  இணையும்  பாட்டு  ஒண்ணு  நான்  பாடட்டுமா பாடல்  இப்படி  பல ...


கடைசியாக ...மாய  நதியிலே  பாடல்  கபாலியில் ...அதுவும் பல  வருடங்கள் பிரிந்து  இணைந்தவர்கள்  சேர்ந்த பிறகு  வரும்  ஒரு  நல்ல பாடல்..

இப்போது  எல்லாம்  செல்போன் , இணையம் ,Facebook, வாட்ஸப்  காலம்  ஆகி  விட்டதால்  இது  போன்ற  பாடலுடன்  இணையும்  காட்சிகள்  குறைந்து  விட்டது  தமிழ்  சினிமாவில் ..

ஆனாலும் பிரிந்தவர்கள்  இணையும் இசையோடு  வரும்  ஆனந்த  கண்ணீர்  பாடல்களை  நாம்  கொஞ்சம்  தொலைத்து  விட்டோம்  என்றே தோன்றுகிறது.


(பிகு ):- இத்தைகைய  பாடல்கள்  சிலவற்றை  நீங்கள்  பின்னுட்டத்தில் (கமெண்ட்ஸ்) பகிர்ந்தால் மகிழ்ச்சி .





வியாழன், 8 ஜூன், 2017

கவிஞர் வாலி ரசித்ததில் ஒரு துளி


தசாவதாரம்  கல்லை  மட்டும்  கண்டால்  பாடல்  எனக்கு  மிகவும்  பிடித்த  பாடல்களில்  ஒன்று..

கமலஹாசனின்  உண்மையான  தாயார்  பெயர்  ராஜலக்ஷ்மி ,தந்தை  பெயர்  ஸ்ரீனிவாசன் ...

சைவ  சோழ அரசனுக்கு எதிராக விஷ்ணு  புகழ்  பாடும்  இந்த  பாடலில்,

 ராஜலக்ஷ்மி  நாதன்  ஸ்ரீனிவாசன் தான் , ஸ்ரீனிவாசன்  சேய் இந்த   விஷ்ணுதாசன் தான்  (கமலின்  கதாபாத்திர  பெயர்)

என்று  வாலி  எழுதியது  பௌண்டரி  என்றால் ,,,


நாட்டிலுண்டு  ஆயிரம்  ராஜ  ராஜர்தான் , ராஜனுக்கு எல்லாம்  ராஜன்  இந்த  ரங்க ராஜன் தான்    (வாலியின்  இயற் பெயர் ரங்கராஜன் )

என்றுஅடுத்த  வரியில்  வாலி  எழுதியது  சிக்ஸர் ...

காட்சிக்கு  பொருத்தமான பாடலில்  , கமல் ,மற்றும்  தன்னையும் பொருந்தியது வாலியின்   அபார கற்பனை.. 

புதன், 17 மே, 2017

இறப்பு தேதி , கடவுளின் அப்டேட்

 கடவுளின் நண்பர் : மனிதர்கள்   ரொம்ப  அதிகம் ஆட்டம்  போட  ஆரம்பித்து  விட்டனர் . சாவே  இல்லை  என்பது  போல் வாழ்ந்து  தங்களது  தேவைக்கு  அதிகமாக   சொத்து குவித்து  வருகிறார்கள், இதனை  சரி  செய்ய  வேண்டும், கடவுளே ?

கடவுள் :-  என்ன  செய்யலாம் ?

நண்பர் :_  எல்லா  மனிதர்களையும்   (expiry  date ) இறக்கும்  தேதியை தலையில் தெரிவது  போல்  எழுதி  update செய்து   விடலாம் . அதற்கு  பிறகு  மனிதர்கள்  ஓரளவு  கட்டுப்பாடுடன்  நடந்து  கொள்வார்கள் .

கடவுள்  அப்படியே  ஆகட்டும்  அப்டேட்  செய்தார்.

அன்று  முதல்  அணைத்து  மனிதர்கள் தலையிலும் (expiry date) இறப்பு தேதி  தெரிய  ஆரம்பித்தது .

ஆனால்  நடந்தது வேறு ...

குறைந்த  ஆயுள்  மனிதர்கள்  உழைக்க  மறுத்தனர் . இருக்கும்  வரை  சந்தோசமாக  வாழ  வேண்டும்  என நினைக்க  ஆரம்பித்தனர். நிறுவனங்களும்  ,குறைந்த  ஆயுள்  உள்ளவருக்கு  வேலை  தர  மறுத்தது . நீ  பாதில  போய்டா  ரிப்ளஸ்ட்மென்ட் கிடைக்காது  என்று.

பெற்றவர்கள்  குறைந்த  ஆயுள்  கொண்ட  குழந்தைகளை வளர்க்காமல் அனாதை  இல்லத்தில்  தர  ஆரம்பித்தனர்.                    குறைந்த  ஆயுள்  கொண்ட  பெற்றோர்  நீண்ட  ஆயுள்  உள்ள  பிள்ளையை  தங்களுக்கு  பிறகு யார்  பார்த்து கொள்வார்கள்  என்று  யோசிக்க  ஆரம்பித்தனர்..

திருமண விளம்பரங்கள்   60 வயசு  வரை  வாழும்  பெண்ணுக்கு  60 வயசு  வரை  வாழ கூடிய  மணமகன்  தேவை  என்று வர  ஆரம்பித்தது  . இறப்பு  தேதி  பொருத்தம்  தான்  முதல் பொருத்தமாக  பார்க்க  ஆரம்பித்தனர். காதலிப்பவர்களும்  இறப்பு  தேதி   பார்த்து  காதலிக்க  ஆரம்பித்தனர்.

உயிர்  காக்கும்  மருத்துவம்  என்று  ஒன்று  இல்லாமல்  போய் விட்டது .. எப்டியா  இருந்தாலும் நான் உயிரோடு  இருக்க  போறேன் . கை , கால் , உடம்பு  நல்லா  வச்சிருந்தா  போதும்  என்று அதை  மட்டும்  சரி  செஞ்சுடுங்க  என்று  டாக்டர்களை  மெக்கானிக்  ஆக  மாற்றினார்கள் .

நிறைய  பேர் எங்கள்  மதத்தில்  தான்  அதிக ஆயுள் கொண்ட  குழந்தைகள்  கிடைக்கிறது  எனவே இங்கு  வந்து  விடுங்கள் என்று கூற ஆரம்பித்தனர். நிறைய  சாமியார்கள்  இறப்பு தேதியை  மாற்றும் வல்லமை எங்களுக்கு  இருக்கிறது என்று  புருடா  விட்டு கல்லா  கட்ட  ஆரம்பித்தனர் .

இறப்பு  தேதி  நெருங்க  நெருங்க  மனிதர்கள்  எல்லோரையும் மகிழ்ச்சியாக  வைத்திருந்து மனிதர்கள்  இறப்பார்கள்  என்ற  கடவுளின்  எதிர்பார்ப்புக்கு   மாறாக மனிதர்கள் நீண்ட  ஆயுளை  உடைய தனது   குடும்பத்தாராக இருந்தாலும்  நண்பராக  இருந்தாலும்    பொறாமை  அடைந்து , வெறுப்பையும், கோபத்தையுமே  உமிழ  ஆரம்பித்தனர்.

நீண்ட ஆயுள் உள்ளவர்களுக்கோ , தங்களது உற்ற  நண்பர்கள் ,உறவினர்கள் ,குடும்பத்தினர் குறைந்த  ஆயுளுடன்  இருப்பதை  காணும் போது குற்ற  உணர்ச்சியில் புழுங்க  ஆரம்பித்தனர் ..

குறைந்த  ஆயுள்  கொண்ட  மனிதர்கள் கொண்ட குழுக்கள் அமைக்க  ஆரம்பித்து , நமக்கு  இல்லாத  உலகம் வேறு  யாருக்கும் இருக்க கூடாது என்று  நாச  வேலைகளில்  ஈடுபட  ஆரம்பித்தனர்

மொத்தத்தில்  நிலைமை இன்னும்  மோசமானது

ஒரு  சின்ன  நம்பர்  அப்டேட்  இவ்ளோ பிரச்சனை  ஆயிடுச்சே என்று கடவுள் பழைய   இறப்பு  தேதி  இல்லாத  வெர்ஸனை  தொடர  ஆரம்பித்தார் .

சாகுற  நாள்  தெரிஞ்சா வாழற  நாள்  சந்தோசமாக இருக்காது  என்ற ரஜினி பட  வசனம் போல் . நமக்கு  சாகுற   நாள்  தெரியாது ஆனால் வாழும் வரை நாமும் மகிழ்ச்சியாக இருந்து மற்றவரையும் மகிழ்ச்சியாக வைத்து  இருப்போம் ..


(concept  inspired by the   story  some where  I  read )














வெள்ளி, 5 மே, 2017

மோடிஜி தந்த அதிர்ச்சி ? - நகைச்சுவை கற்பனை

காலையில் எழுந்து பார்த்தால், எப்போதும்  வெளியில்  கிடக்கும்  பால் , மற்றும்  பேப்பர்ஐ  காணவில்லை ... பால்  மற்றும்  பேப்பர் போடுபவர்  வேலைக்கு  வரவில்லை .... சரி  நடந்து  போய் பால்  கடைக்கு  போனால்    பால்  விலை  நாளை  முதல்  லிட்டர் 500 ரூபாய்  என்று  அறிவிப்பு  வைத்து இருந்தார்கள் .

வீட்டுக்கு  திருப்பினால்  அபார்ட்மெண்ட்  வாசலில்  இருந்த  செக்யூரிட்டி யை  காணவில்லை . வீட்டில்  மனைவி  வீடு துடைக்க வரும்  அம்மா நாளை  வேலைக்கு  வர மாட்டார்களாம் அப்டியே  வரணும்னா  மாதம் 8000 ரூபாய்  வேண்டும்  என்று  கூறியதாக சொன்னாள் .

சரி  காரை  எடுத்து  ஆபீஸ் செல்வதற்கு  பெட்ரோல்  போட்டால்  லிட்டர் 750 ரூபாய்  என்று  10 லிட்டர்க்கு  7500 ரூபாய்  வாங்கினார்கள் .
காலையில் வீட்டில்  காபி   சாப்பிட்டவில்லை என்று  ஆபீஸ் கேன்டீனில்  காபி ஆர்டர் செய்தால்  500 ரூபாய்  பில் வந்தது .
வீட்டு  உரிமையாளர்  இந்த  மாதம்  முதல் வீட்டு  வாடகை 70,000 ரூபாய்  என்று  அதிர்ச்சி  அளித்தார் .

என்னடா  காலைலேந்து  அதிர்ச்சி  மேல் அதிர்ச்சியாக இருக்கிறதுன்னு   இணையதளத்தில் செய்திகளை   பாத்தா ..

நேற்றிரவு  வெளிநாட்டில்  உள்ள  கருப்பு  பணம்  முழுவதும் மீட்கப்பட்டு ஒவ்வரு இந்தியரின்  வங்கி  கணக்கிலும் 15 லட்சம் நமது இந்திய  பிரதமரால்  டெபாசிட் செய்யபட்டுள்ளது

என்று  தலைப்பு  செய்தி  வந்து  இருந்தது ....என்னடா  நமக்கு  வரலையேன்னு  பாத்தா
"  ஏற்கனவே  வருமான  வரி  செலுத்துபவர்களுக்கு  15 லட்சம்  கிடையாது  என்று  பெட்டி  செய்தி

என்ன  கொடுமை  இது ?  என்று  கத்திய  என்னை  பார்த்து மனைவி "  எப்ப  பாத்தாலும்  நியூஸ்  சேனல்  பாத்துட்டு , நடுராத்திரி  எதாவுது கனவு  கண்டு  கத்த  வேண்டியது " என்று  சொன்னாள் .

நல்லவேளை  கனவு  தானா  என்று  சந்தோச  பட்டேன் ....

புழக்கத்தில்  திடீரென  சில லட்சம்  கோடிகள்   வந்தால்,  விலைவாசி  எப்படி  உயரும் , திடீரென  இலவசமாக  கிடைக்கும்  பணம் மக்களை   எந்த  அளவு  சோம்பேறியாக்கும் ...இது  தெரியாம  வாக்குறுதி  அளிப்பவர்களையும் ,அதை  நம்பி வாக்களிப்பவர்களையும் என்ன  செய்வது?



புதன், 3 மே, 2017

தெர்மக்கோல் அமைச்சரும், பணமதிப்பிழப்பு பிரதமரும்


சென்ற வாரத்தில் 60 ஏக்கர்  பரப்பளவில்  தண்ணீர்  தேங்கி  இருக்கும் வைகை அணையில் தண்ணீர்  நீராவி  ஆவதை  தடுக்க  தெர்மோகோல் அட்டையை  விட்டார்   தமிழக  அமைச்சர்  , அந்த  முயற்சி படு தோல்வி அடைந்ததால்   இது  மிக பெரிய  முட்டாள்தனம்  என்று  ஊடகங்களிலும் ,சமூக வலை  தளங்களிலும்  கழுவி ,கழுவி  ஊற்றப்பட்டார்.

இதை விட  பெரிய  முட்டாள்தனம்  ,
கடந்த  நவம்பரில்  நடந்த பணமதிப்பு இழப்பு  நடவடிக்கை ,
ஏறத்தாழ 85%  பணத்தை  ஒரே  அறிவிப்பின் மூலம்  மதிப்பிழக்க செய்தார்கள்.  3 லட்சம்  கோடி  கருப்பு  பணம் ஒழிந்து விடும் , கள்ள நோட்டு  ஒழிந்து  விடும் , ஜனவரிக்கு பிறகு  புதிய  இந்தியா பிறக்கும் என்ற நம்பிக்கையை  ஏற்படுத்தி கோடிக்கணக்கான  மக்களை  ATM  வாசலில்  நிறுத்தினர் .. ஆணால்  98%  பணம்  டிசம்பர்  இறுதியில் வங்கிக்கு  திரும்ப வந்து  விட்டது .கள்ள  நோட்டை  பற்றி பேச்சே  காணோம் . ..ஒரு  மாற்றமும்  இல்லை வரவில்லை   ,இப்போது டிஜிட்டல் இந்தியா  என்று ஜல்லியடிக்கிறார்கள் .

தெர்மோகோல் திட்டத்தை விட  இது  மிக பெரிய முட்டாள்தனமாக முடிவடைந்து விட்டது .
தெர்மோகோல் திட்டத்தில்  இழப்பு 10 ஆயிரமோ  அல்லது  10 லட்சமோ தான் , பணமதிப்பு இழப்பினால்  100க்கும் மேற்பட்ட உயிர்  சேதம் , வேலை  இழப்பு , ஆயிரக்கணக்கான கோடிகளில் பொருளாதார இழப்பு .

 தெர்மோகோல் அமைச்சராவுது  திட்டம்  தோல்வி  அடைந்தது  என்பதை  கவுரவமாக ஒப்பு கொண்டு விட்டார் . பிரதமரோ , நிதி  அமைச்சரோ  ஒப்பு கொள்ள கூடவில்லை .தெர்மோகோல்  அமைச்சரிடம்  காட்டிய   வீரத்தை  ஊடகங்கள்  யாரும் அவர்களிடம் காட்ட  முடியவில்லை.


வியாழன், 20 ஏப்ரல், 2017

வலுக்கும் வலது சாரி சிந்தனை .

 பொதுவான  சமுதாயம் , அது வளமோ, செல்வமோ இருப்பதை  பகிர்ந்து  கொள்வது . உலகின்  வளம்  அனைவருக்கும் பொதுவானது இதில்  நீங்கள்  உங்கள்  அறிவாற்றலால்  அல்லது  பலத்தால்  நீங்கள் அதிகம்  பெற்றால்  அதை பலவீனமானவருடன்  பகிர வேண்டும்  இது  இடதுசாரி  சிந்தனை.

வலது  சாரி  சிந்தனை  என்பது  ஒரு  குறிப்பிட வட்டம் அது  மதமோ, தேசமோ , மாநிலமோ ,நான் உயர  வேண்டும்  என்று  எண்ணுவது . அதற்கு  இது  எனக்கு  சொந்தமானது , எனது   அறிவினாலோ , உழைப்பினாலோ , அல்லது  பரம்பரையினாலோ வந்தது  இதை  நான்  ஏன்  மற்றவரிடம் பகிரவேண்டும் என்ற  சிந்தனை

எப்போதும்  சாதாரண  மனிதன்    இடதும்  இல்லை  வலதும்  இல்லை  நடுவில் இருப்பவன் . தனது  மற்றும்  குடும்பத்தின்  தேவைகள்  நிறைவேற  வேண்டும் , அதே நேரத்தில்  பக்கத்து  மனிதன் கஷ்டப்பட்டால்  உதவ  வேண்டும்  என்றும்  நினைப்பவன் .

கடந்த  சில  ஆண்டுகளில்  வலதுசாரி  சிந்தனைகள் உலகம்  எங்கும்  வலுபெறுகிறது .
இடது  சாரி மற்றும்  நடு நிலைமையாளர்கள் உலகெங்கும்  தோற்கடிக்க  படுகிறார்கள்.
ஒரு  சாதாரண  நாடு நிலை மனிதனை  உனது  வேலை  அவர்களால்  பறி போய்  விடும் , உனது நாட்டு  செல்வங்களை  அவர்கள் அனுபவிக்கிறார்கள் . அவனால்  உனது  குடும்பத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கபட்டுள்ளது   என்று  பயமுறுத்தபடும்  நடு நிலைமை  உடையவன்  வலது சாரி  சிந்தனையை நோக்கி  செலுத்த படுகிறான்.

இதை  டொனால்டு  டிரம்ப் அமெரிக்காவில்  செய்தார் . பிரெக்ஸிட் க்கும்  இதுவே  காரணம் .. மோடி, RSS  இதையே இந்து  தேசிய  வாதமாக கட்டமைத்து வெற்றி  பெறுகிறார்கள் . இதையே  சீமான் ,  போன்றோர் தமிழ்  தேசியம்  என்ற  அளவில்  கட்டமைக்க முயலுகின்றனர்.

இந்தியாவில்   இடதுசாரி  இயக்கங்கள் போராட்டம்  செய்து  வேலை  வாய்ப்பு இல்லாமல்  செய்து  விடுவார்கள்  என்று ஒரு  தோற்றம்  உருவாகி  விட்டது , அதனால் இளைஞர்களை  ஈர்க்க  முடியவில்லை  .இந்தியாவில், நடு  நிலைமை  இயக்கமான  காங்கிரஸ் , மாநில  கட்சிகள் சிந்தனை ரீதியாக  எதிர்க்க  முடியாமல்  தங்களின்  மேல்   சுமத்தப்பட்ட   ஊழல்  குற்றச்சாட்டுகளுடன்  போராடி  வருகின்றன.

ஒவொரு  சிந்தனையும்  ஒரு  உச்சத்தை  அடையும் , அதனால்  பயன்  அடையும் என நினைத்து  தலையில்  தூக்கி  வைத்து  ஆடும்  சாதாரணன்  பயன்  இல்லை  என  உணரும்  போது  தூக்கி  எறிந்து  விடுவான்.

( பி.கு) நான்   ஒன்றும்  பெரிய அப்பாடக்கர்   இல்ல , திடீர்ன்னு  படிச்சத  ,நினைச்சத  நம்ம  நண்பர்களிடம்  பகிரநினைத்தேன் .. தவறுகள் இருப்பின்  மன்னிக்கவும்










செவ்வாய், 18 ஏப்ரல், 2017

OPS Vs TTV Vs எடப்பாடி

தமிழகத்தின்  மக்கள் தொகை  பெருக்கத்தின்   (Fertility rate)அளவு ஒரு   பெண்ணிற்கு 1.6 . தென் மாநிலங்கள் அனைத்தும்  ஏறக்குறைய  இதே அளவுதான் .  மத்திய   இந்தி  மாநிலங்களின்  இன பெருக்கத்தின்  அளவு  ஒரு பெண்ணிற்கு  2.8.

 தமிழகத்தின்  கல்வியறிவு அளவு ஏறக்குறைய  85%, இதே  மத்திய இந்தி  பேசும்  மாநிலங்களின்  அளவு  ஏறக்குறைய 65% மட்டுமே.
உயர்கல்வி  அடைபவர்கள்  தமிழகத்தில் கிட்டத்தட்ட  43% , மத்திய  இந்தி  பேசும்  மாநிலங்களில்  இது  கிட்டத்தட்ட  27% சதவீதம்  மட்டுமே.

இதன்  காரணமாகத்தான்  பெரும்பாலும்  தமிழகத்தில்  உடல்  உழைப்பு  தொழிலாளர்கள்  எண்ணிக்கை  குறைகிறது, படித்த  தமிழ் இழைஞர்கள்  மாநிலத்தைவிட்டோ , தேசத்தை  விட்டோ  கடந்து  பணி  புரியும் சூழ்நிலையும்  ஏற்படுகிறது.
மேலும்  படிக்காத  உடல்  உழைப்பு  பிற  மாநில தொழிலாளர்கள் தமிழகம்  நோக்கி  வர காரணம் .


மிக  அதிகமான  உயர்  கல்வியை  தந்த  நாம் , அந்த அளவு  வேலை வாய்ப்பை  உருவாக்க     முடியுமா  தெரிய வில்லை ?.. மேலும்  இந்த  நிலை  நீடித்தால் அடுத்த  சில  ஆண்டுகளில்   80 களில்  இருந்தது போன்று  வேலை வாய்ப்பு இன்மை   ஏற்படும்  வாய்ப்பு   உள்ளது . அடுத்த சில  வருடங்களில்  50 லட்சத்திற்கும்  மேற்பட்ட படித்த இளைஞர்கள் வேலை  இல்லாமலோ/  தகுதிக்கு  ஏற்ற  வேலை  கிடைக்காமல் தமிழகத்தில் மட்டும்  இருப்பார்கள். ஒரு சமுதாயத்தில் நான்கு  அல்லது  மூன்று  இளைஞர்களில்  ஒருவருக்கு  வேலை  வாய்ப்பு  இல்லாமல்  இருப்பது   பற்ற வைக்க  தயாராக  வெடிகுண்டை  கையில்  வைப்பதற்கு  சமம் .   ( ராம்குமார் ,ஸ்வாதி கொலை  எல்லாம் ஒரு சில  துவக்கங்கள் தான் )

இதை  எல்லாம்  யோசித்து   எதிர்காலத்தை  நோக்கி  செயல்பட  இதுவே  தருணம் . வாய்ப்பை கோட்டை விட்டுவிட்டு  நாம் ஒபிஸ் vs  TTV  vs  எடப்பாடி  விளையாட்டு  விளையாட  கூடாது.  உதவ  வேண்டிய  மத்திய  அரசோ  பிள்ளையை  கிள்ளி  தொட்டிலை  ஆட்டி  கொண்டு  இருக்கிறது.
 யார்  ஆண்டாளும்  மக்கள்  நலத்தை  நோக்கி  சிந்தியுங்கள் .
  எதிர்காலத்தை  நோக்கி  சிந்தியுங்கள் ?


இந்த  தலைப்பு  வைத்தால் நிறைய  பேர் படிப்பார்கள்  என்பதை  தவிர  வேறு  காரணம்  இல்லை .