வியாழன், 20 ஏப்ரல், 2017

வலுக்கும் வலது சாரி சிந்தனை .

 பொதுவான  சமுதாயம் , அது வளமோ, செல்வமோ இருப்பதை  பகிர்ந்து  கொள்வது . உலகின்  வளம்  அனைவருக்கும் பொதுவானது இதில்  நீங்கள்  உங்கள்  அறிவாற்றலால்  அல்லது  பலத்தால்  நீங்கள் அதிகம்  பெற்றால்  அதை பலவீனமானவருடன்  பகிர வேண்டும்  இது  இடதுசாரி  சிந்தனை.

வலது  சாரி  சிந்தனை  என்பது  ஒரு  குறிப்பிட வட்டம் அது  மதமோ, தேசமோ , மாநிலமோ ,நான் உயர  வேண்டும்  என்று  எண்ணுவது . அதற்கு  இது  எனக்கு  சொந்தமானது , எனது   அறிவினாலோ , உழைப்பினாலோ , அல்லது  பரம்பரையினாலோ வந்தது  இதை  நான்  ஏன்  மற்றவரிடம் பகிரவேண்டும் என்ற  சிந்தனை

எப்போதும்  சாதாரண  மனிதன்    இடதும்  இல்லை  வலதும்  இல்லை  நடுவில் இருப்பவன் . தனது  மற்றும்  குடும்பத்தின்  தேவைகள்  நிறைவேற  வேண்டும் , அதே நேரத்தில்  பக்கத்து  மனிதன் கஷ்டப்பட்டால்  உதவ  வேண்டும்  என்றும்  நினைப்பவன் .

கடந்த  சில  ஆண்டுகளில்  வலதுசாரி  சிந்தனைகள் உலகம்  எங்கும்  வலுபெறுகிறது .
இடது  சாரி மற்றும்  நடு நிலைமையாளர்கள் உலகெங்கும்  தோற்கடிக்க  படுகிறார்கள்.
ஒரு  சாதாரண  நாடு நிலை மனிதனை  உனது  வேலை  அவர்களால்  பறி போய்  விடும் , உனது நாட்டு  செல்வங்களை  அவர்கள் அனுபவிக்கிறார்கள் . அவனால்  உனது  குடும்பத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கபட்டுள்ளது   என்று  பயமுறுத்தபடும்  நடு நிலைமை  உடையவன்  வலது சாரி  சிந்தனையை நோக்கி  செலுத்த படுகிறான்.

இதை  டொனால்டு  டிரம்ப் அமெரிக்காவில்  செய்தார் . பிரெக்ஸிட் க்கும்  இதுவே  காரணம் .. மோடி, RSS  இதையே இந்து  தேசிய  வாதமாக கட்டமைத்து வெற்றி  பெறுகிறார்கள் . இதையே  சீமான் ,  போன்றோர் தமிழ்  தேசியம்  என்ற  அளவில்  கட்டமைக்க முயலுகின்றனர்.

இந்தியாவில்   இடதுசாரி  இயக்கங்கள் போராட்டம்  செய்து  வேலை  வாய்ப்பு இல்லாமல்  செய்து  விடுவார்கள்  என்று ஒரு  தோற்றம்  உருவாகி  விட்டது , அதனால் இளைஞர்களை  ஈர்க்க  முடியவில்லை  .இந்தியாவில், நடு  நிலைமை  இயக்கமான  காங்கிரஸ் , மாநில  கட்சிகள் சிந்தனை ரீதியாக  எதிர்க்க  முடியாமல்  தங்களின்  மேல்   சுமத்தப்பட்ட   ஊழல்  குற்றச்சாட்டுகளுடன்  போராடி  வருகின்றன.

ஒவொரு  சிந்தனையும்  ஒரு  உச்சத்தை  அடையும் , அதனால்  பயன்  அடையும் என நினைத்து  தலையில்  தூக்கி  வைத்து  ஆடும்  சாதாரணன்  பயன்  இல்லை  என  உணரும்  போது  தூக்கி  எறிந்து  விடுவான்.

( பி.கு) நான்   ஒன்றும்  பெரிய அப்பாடக்கர்   இல்ல , திடீர்ன்னு  படிச்சத  ,நினைச்சத  நம்ம  நண்பர்களிடம்  பகிரநினைத்தேன் .. தவறுகள் இருப்பின்  மன்னிக்கவும்










செவ்வாய், 18 ஏப்ரல், 2017

OPS Vs TTV Vs எடப்பாடி

தமிழகத்தின்  மக்கள் தொகை  பெருக்கத்தின்   (Fertility rate)அளவு ஒரு   பெண்ணிற்கு 1.6 . தென் மாநிலங்கள் அனைத்தும்  ஏறக்குறைய  இதே அளவுதான் .  மத்திய   இந்தி  மாநிலங்களின்  இன பெருக்கத்தின்  அளவு  ஒரு பெண்ணிற்கு  2.8.

 தமிழகத்தின்  கல்வியறிவு அளவு ஏறக்குறைய  85%, இதே  மத்திய இந்தி  பேசும்  மாநிலங்களின்  அளவு  ஏறக்குறைய 65% மட்டுமே.
உயர்கல்வி  அடைபவர்கள்  தமிழகத்தில் கிட்டத்தட்ட  43% , மத்திய  இந்தி  பேசும்  மாநிலங்களில்  இது  கிட்டத்தட்ட  27% சதவீதம்  மட்டுமே.

இதன்  காரணமாகத்தான்  பெரும்பாலும்  தமிழகத்தில்  உடல்  உழைப்பு  தொழிலாளர்கள்  எண்ணிக்கை  குறைகிறது, படித்த  தமிழ் இழைஞர்கள்  மாநிலத்தைவிட்டோ , தேசத்தை  விட்டோ  கடந்து  பணி  புரியும் சூழ்நிலையும்  ஏற்படுகிறது.
மேலும்  படிக்காத  உடல்  உழைப்பு  பிற  மாநில தொழிலாளர்கள் தமிழகம்  நோக்கி  வர காரணம் .


மிக  அதிகமான  உயர்  கல்வியை  தந்த  நாம் , அந்த அளவு  வேலை வாய்ப்பை  உருவாக்க     முடியுமா  தெரிய வில்லை ?.. மேலும்  இந்த  நிலை  நீடித்தால் அடுத்த  சில  ஆண்டுகளில்   80 களில்  இருந்தது போன்று  வேலை வாய்ப்பு இன்மை   ஏற்படும்  வாய்ப்பு   உள்ளது . அடுத்த சில  வருடங்களில்  50 லட்சத்திற்கும்  மேற்பட்ட படித்த இளைஞர்கள் வேலை  இல்லாமலோ/  தகுதிக்கு  ஏற்ற  வேலை  கிடைக்காமல் தமிழகத்தில் மட்டும்  இருப்பார்கள். ஒரு சமுதாயத்தில் நான்கு  அல்லது  மூன்று  இளைஞர்களில்  ஒருவருக்கு  வேலை  வாய்ப்பு  இல்லாமல்  இருப்பது   பற்ற வைக்க  தயாராக  வெடிகுண்டை  கையில்  வைப்பதற்கு  சமம் .   ( ராம்குமார் ,ஸ்வாதி கொலை  எல்லாம் ஒரு சில  துவக்கங்கள் தான் )

இதை  எல்லாம்  யோசித்து   எதிர்காலத்தை  நோக்கி  செயல்பட  இதுவே  தருணம் . வாய்ப்பை கோட்டை விட்டுவிட்டு  நாம் ஒபிஸ் vs  TTV  vs  எடப்பாடி  விளையாட்டு  விளையாட  கூடாது.  உதவ  வேண்டிய  மத்திய  அரசோ  பிள்ளையை  கிள்ளி  தொட்டிலை  ஆட்டி  கொண்டு  இருக்கிறது.
 யார்  ஆண்டாளும்  மக்கள்  நலத்தை  நோக்கி  சிந்தியுங்கள் .
  எதிர்காலத்தை  நோக்கி  சிந்தியுங்கள் ?


இந்த  தலைப்பு  வைத்தால் நிறைய  பேர் படிப்பார்கள்  என்பதை  தவிர  வேறு  காரணம்  இல்லை .


வியாழன், 30 மார்ச், 2017

பொது வாழ்வில் நேர்மை எவ்வாறு இருக்க வேண்டும்

பொது வாழ்வில்  நேர்மை  எவ்வாறு  இருக்க வேண்டும் ?

சாணக்கியர்  தனது  அறையில்  உட்க்கார்ந்து  படித்து மற்றும் எழுதி  கொண்டு இருந்தார்  , அப்பொது  ஒரு  விளக்கு  எரிந்து கொண்டு  இருந்தது  , சிறிது  நேரம் கழித்து  அந்த  விளக்கை  அணைத்து  விட்டு  இன்னொரு  விளக்கை  பற்ற  வைத்து  எழுத ஆரம்பித்தார்.
அதை  கவனித்த  அவர் மகள்  அப்பா , என்  நீங்கள்  அந்த  விளக்கை  அணைத்து  விட்டு  மற்றொரு   விளக்கை பற்ற  வைத்து கொண்டு எழுதுகிறீர்கள்  என்று  கேட்டாள்.

அதற்கு  சாணக்கியர் , முதலில்  நான் அரசாங்க  பணி   செய்து  கொண்டு  இருந்தேன் , அதனால்  அரசாங்கம்  தந்த எண்ணையில்  எரிந்த விளக்கை  பயன்படுத்தினேன், இப்போது  எனது  தனிப்பட்ட  பணியை  செய்கிறேன் , அதற்கு அரசாங்கம்  தந்த  எண்ணையில்  எரியும்  விளக்கை  பயன்படுத்துவது  தவறு , அதனால்  எனது சொந்த பணத்தில் வாங்கிய  எண்ணையில்  எரியும் விளக்கை  பயன்படுத்துகிறேன்.

  சிறிய  தவறு  தானே  என்று  நான் இன்று செய்தால்  ,  நாளை அந்த  பழக்கம்  பெரிய  தவறு  செய்யவும்  தூண்டும்  என்று கூறினார்.

பொது வாழ்க்கையில்  இருக்கும்   அனைவரும்   இந்த  சாணக்கிய  நீதியை கடை பிடித்தால் இந்த நாடு கண்டிப்பாக முன்னேறும்.

புதன், 22 மார்ச், 2017

அதிகாரம் அவர்களுடைய கையில்

அதிகாரம் அவர்களுடைய கையில் ...,

 தீர்ப்பு  மாத  கணக்கில் ஒத்தி வைக்க படுகிறது, வேண்டும்  என்றவுடன்  தரப்படுகிறது ... ஏனனில் அவர்களே நீதி மன்றம்.
 
எத்தனை சட்டமன்ற  உறுப்பினர்கள்  இருந்தாலும் , அவர்கள்  தலை அசைத்தபிறகு தான்  ஆளுநர் பதவி  பிரமாணம்  செய்து  வைப்பார். ஏனெனில்  அவர்களே  ஆளுநர்கள் .

முதலைமைச்சர்கள் தோற்கடிக்கப்பட்டாலும் , இரண்டவது  இடத்துக்கு  சென்றாலும் , வெற்றியை பண ,அதிகார பலத்தின்  மூலம் திருடலாம் . (கோவா ,மனிப்பூர் ) ஏனெனில் அவர்களே  அரசியல்  சட்டம் .

கட்சி  பெரும்பாலான  தொண்டர்கள் , நிர்வாகிகள்  ஆதரவு  , இல்லாமல் , வெறும்  காகிததில்  கணக்கு  காட்டினால் , மூன்றாவது  பெரிய  கட்சியின் சின்னம் முடக்கப்படும் . ஏனெனில்  அவர்களே  தேர்தல்  ஆணையம் .

எதிர்ப்பவர்கள் கோமாளிகளாகவும் , தேச துரோகிகளாகவும்                        சித்தரிக்க  படுவார்கள் . ஏனனில்  அவர்களே  ஊடகம் ..

ஆனால்  இந்த  தேசம் அனைத்தையும் கடந்தது வந்து உள்ளது  , ஒற்றை  பெண்மணி  தான்  இந்தியா என்று இருந்த காலத்தையும் பார்த்தது அவரின்  தோல்வியையும்  பார்த்தது .

இது  அவர்களின் காலம் , விளையாடட்டும் ,
வீசும்  காற்று மாறும் .







வெள்ளி, 10 மார்ச், 2017

வாழ்க்கையின் ஆச்சரியங்கள்.

.எனது சின்ன வயதில்தான் எத்தனை  ஆச்சரியங்கள் மற்றும் சந்தோசங்கள்.

 ஊருக்கு மேல்  எப்போதாவது பறக்கும் விமானங்கள்,
 தொட்டால் சிணுங்கி செடி,
 ஒளியும்  ஒலியும் வரும்  திடீர் புதிய பாடல்கள்,
 இரண்டாம் வகுப்பு  ரயில்பயணதில்  பின்னோக்கி ஓடும் மரங்கள்,
பிரச்சாரத்துக்கு வந்த ராஜிவ் காந்தியை அருகில் பார்த்தது ,
உலக தமிழ்மாநாட்டின் போது பார்த்த மிதவை பாலம் ,
திடீரென வரும்  கோடைமழை ,
முஸ்லீம் நண்பர்  வீட்டு திருமண  கறி   பிரியாணி .
தினமலர்  தீபாவளி மலர் ஆளுயுர  ரஜினி கமல் போஸ்டர் ,
கொள்ளிடம்  ஆற்றின் அகலம் ,
ஏப்போதாவுது பார்க்கும்  சென்னை நகரத்தின் உயரமான  கட்டிடங்கள்,
 5 தியேட்டர்கள்  ஒரே இடத்தில் இருந்த   மாரீஸ் தியேட்டர்.
ரஜினி படத்தின் முதல் நாள் டிக்கெட்,
உள்ளூரில்  நடந்தால் மட்டும்  கண்டிப்பாக ஜெயிக்கும் எங்க  ஊரு கபடி டீமின்  வெற்றி.

 ஜூன் மாதத்தில் இருகரையையும் தொட்டு கொண்டு நுரையுடன் வரும் காவிரி  தண்ணீர் ,
 எப்பதாவது  நம்மிடம் நேரடியாக  பேசும் பள்ளியின் தாவணி பெண்கள் ,
 முதல் 3 ரேங்கில்  வரும்பொழுது தரும்   ரேங்க் கார்டு,
எப்போதாவது   இருக்கை  காலியாக  வரும்  அரசு பேருந்து.
இப்படி எல்லாமே ஆச்சரியம்...

ஆனால் எனது மகனுடைய தலைமுறைக்கு ஆச்சரியங்கள்  எதுவும் மிச்சம் உள்ளதா   என்று தெரியவில்லை ?

உலக  அதிசயத்தையே நேரில் காட்டினாலும், அப்படியானு பார்த்து அடுத்த வினாடி  மொபைல் கேம் விளையாட  ஆரம்பித்து  விடுகிறார்கள்..

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

கருணாநிதி வழியில் சசிகலா , ஜெயலலிதா வழியில் ஸ்டாலின்

கடந்த 25 ஆண்டுகளாக தமிழக அரசியலின் 2 ஆளுமைகள் கலைஞர் கருணாநிதி மற்றும்  புரட்சி தலைவி  ஜெயலலிதா ..

கலைஞர் அரசியல் அதிக  ஜனநாயகமானது ,
 குடும்பத்தில்  ஒருவருக்குத்தான்  சட்ட மன்ற  தேர்தலில்  போட்டியிட  வாய்ப்பு  என்று  என்று  கலைஞர்  கூறிய போது  அப்போ   ஸ்டாலினுக்கு   போட்டிஇட  வாய்ப்பு  அளிக்க  மாட்டிர்களா என்று  கேட்க்கும்  இரண்டாம்  நிலை  தலைவர்கள்  இருந்தனர் .
எதிர்த்து  கேள்வி  கேட்பவர் களையும்   அனுசரித்து  செல்லவே  முயற்சி  செய்வார்.  தேர்தலில்  போட்டியிட  வாய்ப்பு  கொடுத்து  போட்டியிட  மறுத்தவர்களையும் கட்சியை  விட்டு  நீக்க  மாட்டார்.

அம்மா அவர்கள்  கட்சி  ராணுவ  கட்டுப்பாட்டில்  இருக்க  வேண்டும் என்பதை  விரும்புபவர்.  கட்சியில்  இருந்து  கொண்டு  எதிர்த்து  பேசுவது என்பதை  நினைத்து  பார்க்க  கூட முடியாது. அம்மா அவர்களை தவிர  இரண்டாம்  நிலை  தலைவர்கள்  யாரும்  முன்னிலை  படுத்த  பட  மாட்டார்கள் .
 கலைஞரிடம்  அரசியல்  பயின்ற ஸ்டாலின்  இப்போது  விரும்புவது  ஜெயலலிதா  பாணி  அரசியலையே , பெரும்பாலும்  அவரே  முன்னிலை  படுத்தபடுகிறார்  , தலைமையின்  முடிவை   யாரும் கேள்வி   கேட்க கூடாது . கட்சி  முழுவதும்  தனது  ராணுவ  கட்டுப்பாட்டில் இயங்க  வேண்டும்  என்று  விரும்புகிறார்.

அம்மாவிடம்  அரசியல்  பயின்ற  சசிகலா  இப்போது  கடைபிடிப்பது  கருணாநிதி  பாணி  அரசியலை . எதிர்த்து அறிக்கை  விட்ட கே பி முனுசாமி  இன்னும்  கட்சியில்  இருக்கிறார் . நாஞ்சில்  சம்பத்  கூட  சமாதான  படுத்தபட்டார் . இரண்டாம்  கட்ட  தலைவர்கள்  முன்னிலை படுத்த  படுகிறார்கள்.

இன்னொரு  விசயம் , கலைஞர்  அடிக்கடி  மாநில  உரிமை , திராவிடம் அப்டின்னு  கத்தி  சுத்துவார்.  ஸ்டாலின்  அது எதுவும் செய்வதில்லை . ஆனால்  நடராஜன்  கலைஞர்  வழியில் மாநில  உரிமை , திராவிடர்  என்று  எல்லாம்  பேசுகிறார் .


ஆக , கலைஞர்  வழியில்  சசிகலாவும் , அம்மா  வழியில்  ஸ்டாலின் நடை  போடுகிறார்கள்  

வியாழன், 12 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு தடையும் , தமிழ் பொருளாதாரமும்

ஜெயம் ரவி தனி  ஒருவன் படத்தில்  கூறுவது போல , 6 ம் பக்கத்து பொருளாதார செய்திகள்  தான்  மற்ற  பக்க செய்திகளை  தீர்மானிக்கிறது . பொருளாதாரத்தில்  சிறந்து  இருக்கும்   ஜப்பான்  போன்ற நாடு அணு  ஆயுதம்  இல்லாமலே  வலிமையான  நாடாக  இருக்கிறது.

இந்திய  நிறுவனங்களை  ஏன்  ஊக்குவிக்க  வேண்டும் ?, வெளிநாட்டு  நிறுவனங்கள்  ஒரு சந்தையாக   மட்டும்  பார்க்கும்  பொழுது , இந்திய  தொழில்  நிறுவனர்கள்  சந்தையாக  மட்டும்  பார்க்காமல்  ஒரு நாடு என்று  ஒரு  உணர்வுடன்  பார்ப்பார்கள்  என்ற  நம்பிக்கை  தான் . மேலும்  வரும்  வருமானத்தை  இந்தியாவிலேயே  முதலீடு  செய்வார்கள்  என்ற  நம்பிக்கையும்தான் . போர், இயற்கை பேரிடர்   போன்ற தருணங்களில்  சந்தை  கண்ணோட்டம்  இல்லாமல்  உதவுவார்கள்  என்ற  நம்பிக்கையும்தான் .

இதே காரணத்திற்காக  நாம்   நமது  மாநிலத்தில்  தமிழ்  நிறுவனங்களையும் , தமிழ் தொழில் அதிபர்களையும்  ஆதரிக்க  வேண்டும். உதாரணமாக  தமிழ்  திரைப்படங்களை  பார்த்து  தமிழ்  திரையுலகத்தை  உயிர்ப்பாக  வைத்து  இருப்பதால் , தமிழ்  திரை உலகம்  உரிமையோடும் , உணர்வோடும்   ஜல்லிக்கட்டு , காவேரி  நீர்  பிரச்சனை  போன்றவற்றிற்க்கு குரல்  கொடுக்கின்றனர்.
இத்தகைய  குரலை  நம் அனைவரும் இந்தி  திரைப்படத்தை மட்டும் பார்த்து  இருந்தால் ஷாருக் கானிடமோ ,சல்மான்கானிடமோ  எதிர் பார்த்து  இருக்க  முடியாது .


 உள்ளூர்  அண்ணாச்சியை அழித்து  விட்டு , பன்னாட்டு  மளிகை கடையில்  வாங்க  ஆரம்பித்தால்  என்ன ஆகும்?, அண்ணாச்சி  கடையில்  நடப்பது வெறும் வியாபாரம்  மட்டும் அல்ல  அங்கு  ஒரு  நட்பு,  உறவு, அன்பு   எல்லாமே நடக்கிறது ,  வார்தா  புயலின்  போது  கார்டு  வேலை  செய்யா  விட்டாலும்  , ATM ல் இருந்து  காசு  எடுக்க முடியாவிட்டாலும் உரிமையுடன் அடுத்த  வாரம்  தருகிறேன் என்று  பொருள்  வாங்கினோம் மற்ற  இடங்களில் முடியுமா ?

இன்னொன்று , போட்டியார்களை  வைத்து  இருக்கும்  பொழுது  மட்டுமே வாடிக்கையாளர்  சந்தையாக  இருக்கும் , போட்டியாளர்களை  ஒழித்து  விட்டு  ஒரே  ஆளிடம்  இருந்தால் சந்தையில்  அவன் சொல்வதே  விலையாக  இருக்கும்?

இதற்க்காக  தர  குறைவான  பொருளையோ /.சேவையோ   வாங்குங்கள்  என்று  சொல்லவில்லை , இரண்டு பேரிடமும்  ஓரே  தரமான சேவையோ / பொருளோ  தரும்  போது , சிறு விலை  குறைப்பை  பொருட்படுத்தாமல் உள்ளூர்  வியாபாரத்தை  ஊக்குவிக்க வேண்டும் .

உதாரணங்கள் :-
   சென்னையில்  பல  ஆண்டுகளாக  ஒரு தமிழ் நிறுவனமான பாஸ்ட் ட்ராக்  வாடகை  கார்  சேவையை வழங்கி  வருகிறது . ஆனால்  சர்வதேச  நிறுவனமான  உபேர் , ஓலா  ( பெரும் சர்வதேச  முதலீடு) போன்றவை  மிக  பெரிய  விளம்பரத்துடன் , பெரும் முதலீட்டுடன்  களம்  இறங்கியுள்ளன.   இவர்களை  போன்றவர்களை  கண்முடித்தனமாக  ஆதரித்தால்  இங்கு  உள்ள  பாஸ்ட்  ட்ராக்  போன்ற  உள்ளூர்  நிறுவனங்களையும் ,  சிறு ட்ராவல்  ஏஜென்சிகளையும்  அழித்து  விடுவார்கள் .  இன்று  இவர்களது   சிறு  இலவசத்திற்கு   ஆசைப்பட்டால்  நாளை  சந்தையில்  அவர்கள்  சொல்வதே  விலையாக  இருக்கும் .
இதே போல் பெப்சி , கோக்  க்கு  போட்டியளிக்கும்  காளி மார்க். சீன  பட்டாசுக்கு  எதிர்த்து  நிற்கும்  சிவகாசி  பட்டாசுகள் , ஆச்சி மசாலா , போன்று  பல   தமிழ் நிறுவனங்கள்

தமிழ்நாடு  தொழில்  அதிபர்களை  ஆதரிப்பதன்  மூலம் நமது  மாநில  பொருளாதாரம்  வலுவடையும் , இங்கு  மேலும்  முதலீடுகள்  நடக்கும் .  மாநில  வாழ்வாதார  பிரச்சனைகள் , இயற்கை  பேரிடர்  போன்றவற்றின்  போது  தமிழராய் ஆதரிப்பார்கள் .

ஜல்லிக்கட்டு தடை  , காவிரி  நீர் கேட்டு  போராடுவது மட்டும் போராட்டம்   அல்ல ,  இதே போன்று தமிழ்  நிறுவனங்களை , தமிழர்  தயாரிக்கும் பொருள்களையும் ,சேவைகளையும்  பயன்  படுத்துவதும்  ஒரு  போராட்டம் தான் . வலுவான  தமிழக  பொருளாதாரத்தை  உருவாக்குவோம் . நாம்  வலுவான  பொருளாதார  சக்தியாக  உருவெடுக்கும் போது , இந்த  தேசம் நம்மை  நிமிர்ந்து  பார்க்கும்  ,நாம்  வைத்ததும்  சட்டம் ஆகும் . இது  பிரிவினை  வாதம்  இல்லை  , தேசத்தை  நம்மை  நோக்கி  திருப்ப  ஒரு  முயற்சி .


நாளைய  போராட்டத்திற்கு  வீதிக்கு  வர வேண்டியதில்லை , வாங்கும்  பொருளிலும் /சேவையிலும் ஒரு  கவனம் இருந்தால்  போதும்.