வெள்ளி, 29 டிசம்பர், 2017

தமிழ் படம் காட்சியும் , இந்திய பிரதமரும்

தமிழ் படம் திரைப்படத்தில்  ஒரு  நகைச்சுவை  கட்சி வரும் ...

சிவா ஒரு பாடலில் முன்னேறும் காட்சியில் , சிவா  ஏர்போர்ட் , சிவா  ரயில் நிலையம் , சிவா  மருத்துவமனை  என்று  கிண்டலடத்திருப்பார்கள்.

ஆனால் இன்று நடக்கும் காட்சிகளை  பார்க்கும்  போது , அந்த  காட்சியை  விட  உண்மை  மோசமாக  இருக்கிறது .

மோதி தேர்தல் ஆணையம் ,
மோடி  நீதிமன்றம் ,
மோடி வருவாய்த்துறை ,
மோடி  அமலாக்க  பிரிவு ,
மோடி  காவல்துறை ,
மோடி  ஊடகங்கள் ,
என்று  ஒரு  மனிதரின்  அதிகாரத்தில்  அத்தனை  துறைகளும் அடிபணிகிறது ..

தமிழ் படம் காட்சியும் , இந்திய பிரதமரும்


திங்கள், 25 டிசம்பர், 2017

TTV RK நகரில் வென்ற காரணம்

வெறும் பணம்  என்று  ஒற்றை  வரியில்  உதாசீனப்படுத்தினால் உங்கள் கணிப்பு தவறு.
ஒரு உதாரணம் :-

RK  நகர்  தொகுதியில்   TTV  தினகரனுக்காக  களப்பணியில்தஞ்சாவூர்   டெல்டா பகுதியை  சேர்ந்த  இருக்கும் தம்பி  ஒருவரை  தொலைபேசியில்  எதேச்சையாக தொடர்பு  கொள்ள நேர்ந்தது.

சபரி மலைக்கு  மாலை  போட்டு  இருந்த  அவர்  மலைக்கு  செல்வதையும்  சிறிது  தள்ளி  வைத்து  பிரச்சார  பணியில்  தீவிரமாக இருந்தார்.

நான்  " ஏம்ப்பா  பொழப்ப   விட்டுட்டு  , இப்படி  வந்து  சென்னையில்  பிரச்சாரத்தில்  அலைந்து  கொண்டு இருக்கிறாய் ? என்று  கேட்டேன். ஒனக்கு  TTV  என்ன  தர  போறார் ? என்றேன்.

அதற்கு  அவர் ... நான் தஞ்சை  வந்த  போது  சில முறை  TTV யை  கூட்டத்தில்  ஒருவனாக  சந்தித்தது  உண்டு ... நேற்று  RK  நகரில். TTV  வண்டியுடன்  ஓடிவந்தேன் . கவனித்த  TTV , தம்பி  ஒடி வராதே  அடி  பட  போகுது  என்றார். "  பரவா இல்லைனே  என்று  தொடர்ந்தேன் . பின்னர். TTV  " திருக்காட்டுப்பள்ளி  தம்பி " (என்று  எனது  ஊர் பெயரை  குறிப்பிட்டு)  சொன்னா  கேட்க  மாட்டியா  என்று அன்புடன்  கண்டித்தார்..
இது  போன்ற  அன்புதான் எங்களை  போன்ற  இளைஞர்களை    களத்தை  விட்டு  வெளியேறாமல் அவருக்காக பணியாற்ற   தூண்டுகிறது  என்றார்.

இது  ஒருவரின்  அனுபவம் மட்டும்  அல்ல. பல்வேறு  இளைஞர்களின் அனுபவமும்  இதுதான் .

தேர்தல் களம்  வரும்  ,செல்லும் .. ஆனால்  களத்தை தாண்டி  தொண்டர்களின்  அன்பை  சம்பாதிக்கும்  தலைவனை  தேர்தல்  வெற்றி  தோல்விகள்  ஒன்றும்  செய்து  விடாது.




வெள்ளி, 15 டிசம்பர், 2017

கந்தசாமியும், வங்கியும் , காஷ்மீரும்


கந்தசாமி  :-  என்னமோ வங்கியில்  டெபாசிட்  பண்ண  பணத்தை  எடுக்க  முடியாதுன்னு சொல்ராங்களே   உண்மையா ? அரசாங்கம்  சட்டம்  கொண்ட  வர போகுதுனு சொல்ராங்களே?

பக்த் :- அத  பத்தி  எனக்கு  நன்னா  தெரியல , ஆனால்  இந்த  தேசத்துக்காக  நீங்க  ஏன் சின்ன  சிரமத்தை  கூட  பொறுத்துக்க மாட்டேன்ரேல் ... காஷ்மீரில் ..நம்ப  ராணுவ  வீரர்கள்  எல்லாம் ...

கந்தசாமி  :- என்னது மறுபடியும்  காஷ்மீரா . முடியல  ..ஆளை  விடுங்கடா  சாமி....


செவ்வாய், 12 டிசம்பர், 2017

தலைவன் -TTV

தலைவன் 

இடை தேர்தல் ,
ஆட்சி இல்லை ,
கட்சி இல்லை சுயேட்சையாக  போட்டி ,
விரும்புகின்ற  சின்னம் இல்லை ,
மத்திய , மாநில  அரசுகளை  எதிர்த்து பணி,
கடுமையான  கட்டுப்பாடுடன்  தேர்தல்  ஆணையம் ,

இத்தகைய ஒரு  சூழ்நிலையில் , பெரும்பாலான  தலைவர்கள் , தாங்கள்  நேரிடையாக  களத்தில்  இறங்குவது ரிஸ்க்  என்று  பெரும்பாலும்  வேறு  யாரையாவது  இறக்கி  ஆழம்  பார்ப்பார்கள் ..

போர்க்களத்தில்  எதிரியை சந்திக்க வீரர்களை   முன்னே  விட்டு பின்னால்  இருந்து  பார்க்கும்  தளபதிகளை  போல்  இல்லாமல் , ஆபத்து  எது   வந்தாலும் அதை  தானே  பயமின்றி  முன்னின்று சந்திக்கின்ற துணிவு தினகரனிடம்  இருக்கிறது.

போகும்  பாதை  பூப்பாதையாக  இருந்தால்  தொண்டனை  அனுப்பி  இருப்பார் , ஆனால்  அபாயகரமான பாதை என்பதால் தானே  சந்திக்கிறார்.

நாளை  வெற்றி  அடைந்தால்  ,  முன்னின்ற தன்னை  விட  தன்  வெற்றிக்கு  பின்னால் நின்று உழைத்த தொண்டர்களுக்கு   உரித்தாக்குவார் , சூழ்ச்சியால் முடிவு  வேறுவிதமாக இருந்தாலும்   அதை தன்னுடையதாக ஏற்கும்  மனப்பக்குவமும்  உள்ள  தலைவர்  TTV தினகரன்  மட்டுமே.

பிறந்த  நாள் வாழ்த்துக்கள்  TTV  தினகரன் 


80, 90 களில் வளர்ந்தவர்களின் நினைவுகளில் மட்டும்


நீண்ட இடைவேளைக்கு  பிறகு  ஒரு அரசியல் இல்லாத பதிவு..

இன்று கிட்டத்தட்ட  30 % மேற்பட்ட  திரைப்படங்கள்  திரைஅரங்கிலோ , தொலைக்காட்சியிலோ  பார்க்காமல் , மொபைல்  போன்  திரையில்  பார்க்கப்படுகிறது ...

YOU TUBE ,Hot star, Sun next, Amzon prime, Netflix..Tamilrockers ...ஏகப்பட்ட  வழிகள்  திரைப்படங்களை  பார்க்க...

80, 90 களில் திரை அரங்கின் நெரிசல்  இல்லாமல் வீட்டில்  அமர்ந்து  பார்க்க VCR ,VCP  வந்த  தருணங்களை  நினைத்து  பார்த்தால் ..

VCR  பெரும்பாலும்  வெளிநாட்டில்  இருந்து  இறக்குமதி  செய்யப்பட்டது.நடுத்தர  வர்க்கம் வாங்கும்  விலையும் அல்ல ..
கிட்டத்தட்ட  3 முதல்  4 மாத  சம்பளம்  அல்லது 40 முதல்  50 முட்டை  நெல்  விலை . எனவே  வாடகை  தான்  பெரும்பாலானவருக்கு ..

ஒரு  வார  இறுதியில் 12 மணி  நேர  வாடகை 200 வரை , கேசட்  வாடகை  தனி ,  வாடகைக்கு  வாங்கி வந்தால்  முரட்டுத்தனமாக 4 படங்களை  விடிய  விடிய தூங்காமல்  கடுமையாக பார்த்த  தருணங்களும்  உண்டு. டெக் (VCR  ) வாடகைக்கு  விடுதல்  ஒரு  தொழில் ..அதை  தூக்கி  கொண்டு  வந்து  போட்டு  காண்பித்து  செல்வதற்கு  ஒரு  ஆபரேட்டர்.அவருக்கு  போற  இடத்தில சாப்பாட்டு , ராஜ உபச்சாரம் தான் .. இவ்ளோ  கஷ்டப்பட்டு  எடுத்து  வந்து  பார்க்கும் படத்தின்  காஸெட்  சிக்கி கொண்டு  சிவராத்திரியான கதையும்  உண்டு.
  நல்லது , கெட்டது  நடக்கும்  வீடுகளில் , உறவினர்கள்   கூடி  பார்க்க  வாடகை  வீடியோ  என்பது  கலாச்சாரமாகவே  இருந்தது ..

அதே  போல் , இன்று  ஆயிரம்  ஆடியோ  பாடல்கள்  ஒரு  மொபைலில் .அன்று  ஒரு  காஸெட்  அதிக  பச்சம் 12 பாடல்கள் .. கம்பெனி காஸெட்  ரொம்ப  சிலரிடம் , பெரும்பாலும் பல  படத்தின் பாடல்களை ஒரு  காஸெட்டில்  பதிவு  செய்ய  ரெகார்டிங்  சென்டரே துணை. 
என்னென்ன பாடல்   என்பதை செலக்ட்  செய்ய  குடும்பத்தில்  விவாதம்  எல்லாம்  நடக்கும். இன்று  I Phone -8   என்ன  அன்று நல்ல  டேப்  ரெக்கார்டர்  ஸ்பீக்கர்  சிஸ்டம் +100 காஸெட்  வைத்து  இருக்கும்  நன்பர்கள்  எல்லாம்  செம்ம  கெத்து.

 வீடியோ  வாடகை , ஆடியோ ரெகார்டிங்  சென்டர் ,STD  பூத் ,வாடகை  சைக்கிள்   கடை , பொங்கல்  வாழ்த்து  கடை ,  போன்ற பல  தொழில்கள் இன்று காணவில்லை.ஆனாலும்  80, 90 களில்  வளர்ந்தவர்களின்   நினைவுகளில்  மட்டும் ...

தொழில்நூட்பத்தின் காரணமாக  வாழ்க்கை  இன்று  எளிதாகி  விட்டது ஆனாலும்  எதையோ  தொலைத்த  பீலிங் .....



புதன், 6 டிசம்பர், 2017

MGR நூற்றாண்டு விழாவும் , தொடரும் தர்ம யுத்தமும்

தமிழக  ஆட்சியாளர்களின்  3 தலையாய  பணிகள்

1. MGR  நூற்றாண்டு விழா  கொண்டாடுவது
2. குட்டி  கதை  சொல்லி  கூட்டத்தை கலைப்பது
3. திரும்ப  MGR  நூற்றாண்டு  விழா கொண்டாட்டம் .


இந்த  ஒரு  வருஷம்  ஒவ்வரு  மாவட்டமா MGR நூற்றாண்டு  விழா கொண்டாடி  ஒட்டியாச்சு .
அடுத்த  வருஷம்  என்ன  செய்வது ?
பேசாம  ஒவ்வரு  மாநிலமா போய்  கொண்டாடலாமா ? பி டீம்  பாய்ஸ்  யோசனை ..


Flight  ticket  offer போட்டா  தர்ம  யுத்தம்  குரூப்  மொத்தமா அடுத்த வருஷம் எல்லா மாசத்துலயும் டெல்லிக்கு  டிக்கெட் புக்  பண்ணி வைப்பது நல்லது ....உங்களை  கட்சியில்  வச்சு  செய்வார்கள் ...        மிஸ் இவன்  என்ன கிள்ளிட்டான்னு  கம்பளைண்ட்  பண்ணணும்ல ?

MGR நூற்றாண்டு விழாவும் , தொடரும் தர்ம யுத்தமும்


வியாழன், 23 நவம்பர், 2017

அதிமுகவின் பி டீம் -பாஜக புலம்பல்

நமது  பாஜக  நண்பர்  ஒருவரை  நீண்ட  இடைவேளைக்கு  பிறகு  சந்தித்தோம் ..
என்னங்க  தமிழக ஆட்சி  உங்கள்  தயவில்தான் நடக்கிறது  என்கிறார்கள் , சந்தோஷம்தானே என்றதற்கு ..

மனிதர் பொங்கி தீர்த்து  விட்டார் ..

2014 தேர்தலில் திமுக , அதிமுக  இல்லாத  கூட்டணி  18 % சதவீத  வாக்குகள்  பெற்றது .. இது  ஒரு பெரிய  விஷயம் .. பாஜக  மட்டும்  5 முதல்  7% வாக்குகளை  பெரும்  கட்சியாக  உருவெடுத்தது. நடுத்தர மற்றும்   உயர்நடுத்தர  குடும்பத்தினர்  நன்மதிப்பை  பாஜக  பெற்றிருந்தது .

ஜெயலலிதா  மறைவுக்கு  பின்  அதிமுக  உள்கட்சி  விவகாரங்களில்  தலையிடாமல்  இருந்தால் , அதிருப்தி உருவாகி பலர்  பாஜக விற்கு  வந்து  இருப்பார்கள்  + திமுக  எதிர்ப்பு  வாக்குகள்  பாஜகவை  நோக்கி  வந்து  இருக்கும் , படிப்படியாக  15 முதல்  20 சதவீதம்  பெற்று  பெரிய  இயக்கமாக  வலுபெறுவதற்கான  வாய்ப்பும்  இருந்தது ..

ஆனால்  தேவை இல்லாமல்  அதிமுக உட்கட்சி  பஞ்சாயத்தில் இறங்கி ,   இப்போ  தீர்ப்பு  வர போகுது , தேர்தலை  தள்ளி  வைக்க  போகிறார்கள் , தகுதி நீக்கம்  செய்ய போறார்கள் என்று  எல்லாத்தையும் தமிழக  பாஜக  தலைவர்கள்  சொல்லி, OPS யை   அடிக்கடி  பிரதமரை  சந்திக்க  வைத்து  எல்லாவற்றிற்கும்  பின்னால்  பாஜக  இருக்கிறது  என்பதை  மக்களிடம்  கொண்டு சேர்த்தனர்.

இப்போ  இந்த  அரசு  செய்யும்  தவறுகளுக்கு , அதிமுக  அமைச்சருக்கு  முந்தி  முட்டு  கொடுக்கிறார்கள்  சில தமிழக பாஜக  தலைவர்கள்.  அதுவும்  சிலருக்கு  தமிழகத்தில் பாஜக  ஆட்சியை  விட  இந்த  ஆட்சியே  நீடித்தால்  வசதி  அதிகம்  என்று  நினைக்கிறார்கள். எனக்கு  என்னமோ  அவர்கள்  பிஜேபி -பி டீம்  மாதிரி  தெரியவில்லை , தமிழக பாஜக  தான் ஆள்வோரின் பி டீம்  ஆகி  விட்டது.

ஆள்பவரிடம்  இரட்டை  இலையை   கொடுத்தாலும் , இவர்களை நம்பி  கூட்டணி வைக்க முடியுமா ,பாஜக  சிறிது அதிகாரம் இழந்தால் சசிகலாவையே கை கழுவியவர்கள் , பாஜக வை எளிதில்  தூக்கி  எறிந்து விடுவார்கள்,

சொந்தமாக கட்சிக்கு  என்று   இருந்த  5% வாக்கு வங்கியையும்  நாங்கள்  இழந்து  கொண்டு  இருக்கிறோம்  என்பது  தான்  உண்மை.


அட  இவுரு  சொல்றதும்  சரிதான்  போல ... ..

அதிமுகவின் பி டீம் -பாஜக  புலம்பல்






புதன், 15 நவம்பர், 2017

மாநில உரிமை - மிரட்டி பணிய வைக்க முடியுமா ?

18ம் நூற்றாண்டு,  வெள்ளையர்களின்  ஆட்சிக்கு  எதிராக முதன் முதலாக வாள் உயர்த்திய  இனம்,

19 ம் நூற்றாண்டு,  குற்ற பரம்பரை சட்டத்தை கொண்டு அடக்கிய போது எதிர்த்து போராடிய இனம்,

20 ம் நூற்றாண்டு,  நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் இந்திய தேசிய ராணுவத்துக்கு அழைத்த போது, "வெற்றி வேல், வீர வேல்  என்று முதலில் களத்தில்  நின்ற இனம்...

அவர்கள் ஒரு சாதிக்காக நிற்கவில்லை , தமிழுருக்காகவும் , ஒட்டு மொத்த இந்தியாவுக்காகவும  நின்றனர்.

அதே இன்றும்
 மாநில உரிமைக்காகவும், மக்கள் நலனுக்காகவும் ,  அந்த  மண்ணில்    தோன்றிய   மாவீரர்கள் தோள் உயர்த்தினால்,  பொய் வழக்கு, வருமான வரித்துறை, சிறைச்சாலையை  காட்டி  பணிய வைக்க முடியுமா என்ன ?


அன்றும் , எட்டப்பர்கள்  அதிகாரத்திற்காகவும் , பணத்திற்காகவும்  காட்டி கொடுத்தனர் , வெள்ளையருக்கு  துணை நின்றனர் .

ஆனால் வரலாறு  அவர்களை  எல்லாம்  மறந்து  விட்டது. போராடியவரையே  நினைவில்  வைத்து  கொண்டது

அதே  போல்  நாளைய  வரலாறும்... எட்டப்பர்களை  புறம் தள்ளி , மாவீரர்களை  நினைவில்  கொள்ளும்.


புதன், 8 நவம்பர், 2017

பணமதிப்பிழப்பு காமெடி விருதுகள்

#பணமதிப்பிழப்புகாமெடிவிருதுகள்

ஓராண்டு  முடிவடைந்த  நிலையில் , சிறந்த  பங்களிப்பிற்காக பணமதிப்பிழப்பு  விருதுகள் அறிவிக்கப்பட்டு  உள்ளன.

சிறந்த வசனகர்த்தா & ஹீரோ  :-  பிரதமர் நரேந்திர மோடி .
 (கெட்டவர்களின்  கையில்  இருக்கும்  பணம்  வெறும்  காகிதம், மூன்று  மாதங்களில் புதிய இந்தியா பிறக்கும்  போன்ற உணர்ச்சிகரமான  வசனங்களுக்காக, அதை அறிமுக  காட்சியில் உணர்ச்சிகரமாக  பேசியதற்காக )

 சிறந்த  துணை நடிகர் :-   உர்ஜிட் படேல், சக்திகாந்த தாஸ்  (ஹீரோவிற்கு  உதவியாக  விளக்கமளித்த  காட்சிக்காக ).

சிறந்த OPENING  சீன்  :-  ஹீரோவின்  அறிமுக காட்சியில்   உணர்ச்சி  பொங்க  பேசி முடித்ததும் , ரஜினி, கமல், அனிருத், RJ பாலாஜி  போன்ற பொருளாதார  நிபுணர்கள்  வாழ்த்தி பாடும் புதிய  இந்தியா ஓப்பனிங்  சாங் ..

சிறந்த திருப்புமுனை  காட்சி :- புதிய  நோட்டுகள்  இதுவரை அச்சடிக்கப்படவில்லை  என்று  மக்களுக்கு  தெரிய  வரும்  காட்சியும், புதிய  நோட்டுக்கள் size  பழைய ATM ல்  வைக்க  முடியாது என்று  தெரியவரும்  காட்சியும் ..

சிறந்த க்ளைமாக்ஸ் :-   இறுதியில் ஒரு  சதவீதம்  கூட  கருப்பு பணம் பிடிபடவில்லை என்ற உண்மை தெரியும்  போது, தொடரும் என்று சொல்லி  "டிஜிட்டல் இந்தியா " என்னும்  இரண்டாம்   பாகத்தை நோக்கி  திசைதிருப்பி  படத்தை முடித்தது .

Best  Cameo ( சிறந்த  கேமியோ ) :- சேகர்  ரெட்டி, சிறு  காட்சி  என்றாலும் , கோடிகணக்கானவர்கள் கையில்  இருக்கும்  ஆயிரம், ஐநூறை மாற்ற வரிசையில் நின்ற போது , கெத்தாக 33 கோடியை  மாற்றிய  காட்சிக்காக .

சிறந்த  வசனம்  :- படம்  முழவுதும் மௌனமாக  இருந்தாலும்  கடைசியில் "monumental  Failure  " என்று முன்னாள்  பிரதமர் பேசும் ஒற்றை  வரி டயலாக்

சிறந்த  இயக்குனர்  விருது : நிதியமைச்சர்  ( படம்  தன்னுடையதாக  இருந்தாலும் , ஹீரோவை  பெர்போர்மன்ஸ் செய்யவிட்டு  பின்னணியில்  இருந்ததற்காக )

சிறந்த நவரச காட்சி :-  ஏராளமான  ATM  வரிசை  மரணங்களை பற்றி  கேள்வி  கேட்ட  பொழுது ,  எல்லையில்  ஏராளமானவர்கள் இறக்கிறார்கள் .ஒரு  சிறு கஷ்டத்தை  கூட தாங்க முடியாதா என்று  கேட்டு,சோகத்தையும்  சந்தோசமாக ஏற்று  கொள்ள  வைக்கும்  காட்சி.

சிறந்த  நகைச்சுவை  நடிகர் :-   திருவாளர்  பொதுஜனம் (பின்னணியில்  உள்ள  அரசியல்  புரியாமல் , தங்களை  ஒரு எல்லையில்  உள்ள  போர்  வீரன்  ரேஞ்சுக்கு  பீல்  பண்ணி  வரிசையில்  நின்று  ஏமாந்த காட்சிக்காக )

ஏதேனும்  விருதுகள்  விடுபட்டு  இருந்தால்  , நீங்களும்  வழங்குங்கள்.

#Demodisaster

திங்கள், 6 நவம்பர், 2017

ஒரு தலைவன் உருவாகிறான்


   கடந்த  வாரம், திரு  TTV  தினகரன்  பசும்பொன்  சென்ற பொழுதும், தஞ்சாவூர்  வருகையின்போதும் , மிக பிரமாண்டமான   கூட்டம்  கூடியது .அதிலும்  மிக  பெரும்பாலும் இளைஞர்கள்  18 முதல்  35 வயதுக்கு  உட்பட்டவர்கள். 40 வயதிற்கு  மேற்பட்டவர்களை  எண்ணி  விடலாம் . அப்படி  ஒரு ஆர்ப்பரிப்பு , ஒவ்வரு  இடத்தையும்  கடக்க  சில மணி நேரம் ஆனது.

காசு குடுத்து  கூட்டி  வந்தார்கள்  என்று  எளிதில் புறந்தள்ளி   விட முடியாது . காசு  கொடுத்து  வந்தவர்கள்  யாரும்  தங்களது  சொந்த  இரு  சக்கர  வாகனங்களில்  வந்து  ரோட்டின்  இருபுறமும் நின்று   ஆர்ப்பரிக்க  மாட்டார்கள்.  TTV  அருகில்  சென்று  புகைப்படம்  எடுக்க  துடிக்க மாட்டார்கள் ..

 TTV யையும்   சும்மா  சொல்ல  கூடாது, சளைக்காமல்  மனிதர்களை சந்திக்கிறார் . ஆயிரக்கணக்கில் இளைஞர்களுடன்   புகைப்படம்  எடுத்து கொள்கிறார் . 60-70 களில்  இருந்த புரட்சி  தலைவர்  போல்  எளியவர்கள் TTV யை  எளிதில்  அணுக  முடிகிறது . இரண்டு , மூன்று முறை  பார்த்தவர்களை  பெயர் சொல்லி  அழைக்கும் பழம்பெறும் தலைவர்களின் குணமும்  TTV  தினகரனிடம் உள்ளது.  துண்டு  சீட்டு , குறிப்புகள்  இல்லாமல்  மிக  பெரிய  கூட்டங்களில்  உரையாற்றுகிறார்.  பத்திரிகையாளர்களை  பதட்டம்  இல்லாமல்  வெகு  எளிதாக  கை  ஆளுகிறார் .



TTV க்கு  என  ஒரு கூட்டம்  உருவாகி  விட்டது .  டெல்டா மற்றும்  தென்  மாவட்டங்களில்  குறிப்பாக மிக  பெரிய  இளைஞர்  படை உருவாகி  விட்டது,   மேலும் ஒரு  மாற்றத்திற்கான வேகம் (momentum for  change  ) தெரிகிறது .

இனி இவர்கள்  முன்  இருக்கும்  சவால்கள்.

1, இந்த வேகத்தை  தேர்தல்  வரும்  வரை  தக்க  வைத்து  கொள்ள  வேண்டும் .
'
2, இந்த  ஆட்சியை  எவ்வளவு  விரைவில்  கலைக்க  முடியுமோ  அவ்வளவு  விரைவில்  கலைக்க  வேண்டும் .

3, எதிர்கொண்டு இருக்கும்  பொய் வழக்குகளை  முறியடிக்க  வேண்டும் .

4, ஒரு  ஜாதி  என்ற முத்திரை  விழுவதை எந்த  காலத்திலும்  அனுமதிக்க  கூடாது

5, ஜெயலலிதாவுக்கு என   விழும்  பெண்  வாக்காளர்களின்  வாக்குகளை   கவர  வேண்டும் .

6, இந்த  இளைஞர்  கூட்டம்   மக்களின்  பிரச்சனை  சார்ந்து  களப் பணி  ஆற்றிட  வேண்டும் .

இவற்றையெல்லாம்  செய்து  முடித்தால் , TTV ..என்னும்  தலைவனின்  பெயர்  அதிமுக  வரலாற்றில்  பொன்  எழுத்துக்களால் எழுதப்படும். 




திங்கள், 30 அக்டோபர், 2017

சின்னம் யாருக்கு கிடைக்கும்?

#சின்னம்
நாடு சுதந்திரம் அடைந்த பொழுது 80% மக்கள் எழத்தறிவற்றவர்கள்.
தேர்தலின் போது வேட்பாளர் பெயரையோ, கட்சியின் பெயரையோ படிக்க முடியாதவர்கள்.
அவர்களுக்காக உருவானது தான் சின்னம்,
சுவர்களில் சின்னம் வரைந்து பிரபலமடைய வைத்தனர்.
ஆனால் இன்று 95% மக்கள் கல்வி அறிவு உடையவர்கள். மக்கள் சுவர், செய்திதாள் எல்லாம் தாண்டி Facebook, whatsapp, internet, Satellite Channel வரை அரசியல் பேசுகின்றனர்..
இன்னும் சின்னம் கிடைச்சா ஈஸியா ஜெயிப்போம்ன்னு நினைக்கிறது 90% மக்களையும் முட்டளா நினைக்கிற மாதிரி தான்..
சின்னம் இருக்கிற இடத்தில் தான் இருப்பேன், வாக்களிப்பேன் என்பது அதை விட முட்டாள்தனம்.

#வெற்றியோ , தோல்வியோ உங்களின் நடவடிக்கையே தீர்மானிக்கும்.

ஒரு செய்தி மக்களை சென்றடய நாள் கணக்கில் ஆகி , மக்கள் அதை பற்றி வருடக்கணக்கில் பேசுவார்கள்,
இன்று மக்களை நிமிடத்தில் செய்தி  சென்றடைந்து, மக்கள் 4 நாட்களில் மறந்தும் விடுகின்றனர்...

இன்றும் நான் என்ன தப்பு வேணாலும் செய்வேன், ஆனால் மக்கள் MGR சின்னத்துக்காக எனக்கு வாக்களிப்பார்கள் என்பதும் மூட நம்பிக்கை தான்..

#வெற்றியோ, தோல்வியோ உங்கள் நடவடிக்கையே அதை தீர்மானிக்கும்....

its my opinion........

செவ்வாய், 24 அக்டோபர், 2017

TTV தினகரனும் YSR ஜெகன் மோகன் ரெட்டியும் ...வழிகாட்டும் ஆந்திர வரலாறு.

TTV  தினகரனும்  YSR  ஜெகன் மோகன்  ரெட்டியும் ...வழிகாட்டும் ஆந்திர  வரலாறு.


      2009  YS  ராஜசேகர  ரெட்டி மறைவுக்கு  பிறகு , ஒட்டுமொத்த  ஆந்திர காங்கிரசும்  ஜெகன்  மோகன்  ரெட்டியின்  பின்  அணிவகுக்க  தயாராகிறது. ஆனாலும்  மத்திய  காங்கிரஸ் அரசுக்கு  மாநிலத்தில்  இன்னொரு வலிமையான  தலைவரை  உருவாக்க  மனம்  இல்லை . ஜெகன்  மோகன்  ரெட்டியை ஒதுக்கி  விட்டு , மக்கள்  செல்வாக்கு  இல்லாத ரோசையா , கிரண் குமார்  ரெட்டி  போன்றவர்கள் முதல்வர்  ஆக்கபடுகிறார்கள் .

மத்திய  மாநில  அரசுகளின் அதிகாரத்தை  பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக   YSR ஆதரவாளர்களை  இழுக்க  ஆரம்பித்தனர். 
சுதாரித்து  கொண்ட  ஜெகன்  மோகன் , தன்னுடைய ஆதரவாளர்களான 18 MLA களுடன்  பிரிகிறார். அவரின்   மீது வருமான  வரி துறை , அமலாக்க  பிரிவின் மூலமாக   வழக்கு  போடபடுகிறது . 16 மாதம்   சிறையில்  அடைக்கபடுகிறார்.                                மத்தியில்  மாநிலத்திலும்  காங்கிரஸ் ஆட்சியை  தொடர்கிறது . இரண்டாம்  கட்ட  தலைவர்கள் எல்லோரும் அதிகாரத்தை விட  மனமில்லை காங்கிரஸில் தொடர்கிறார்கள்

தேசிய  கட்சியாதலால் சின்னம்  கேட்க கூட  முடியவில்லை . வேறு சின்னம்  தான் . 55 ஆண்டுகால  ஆந்திர அரசியலில்  கை  சின்னம்  இல்லாமல் நிற்க முடியுமா என்றார்கள். ஆனாலும் ஜெகன் செல்வாக்கு  உயருகிறது . 2014 பிஜேபி  கூட்டணியுடன்  போட்டியிட்டு , மோடி  அலையில் மயிரிழையில்  நாயுடு வெற்றிபெறுகிறார் ..ஜெகன் மோகன்புதிய  சின்னமான  மின்விசிறி  சின்னத்தில் (FAN) போட்டியிட்டு  67 சட்டமன்ற தொகுதிகளிலும் , 9 நாடாளுமன்ற  தொகுதியிலும்  வெற்றி பெற்று வலுவான எதிர்க்கட்சி  தலைவர்  ஆகிறார் .

சிரஞ்சீவி  போன்ற  நடிகர்கள்  வந்து  காங்கிரஸில்  சேர்ந்து  மாநிலத்தை இரண்டாக  பிரித்து குட்டையை  குழப்பினாலும்,   காங்கிரஸ ஒரு நாடாளுமன்ற  தொகுதியிலோ  , ஒரு சட்டமன்ற  தொகுதியிலோ கூட  வெற்றிபெற  முடியாமல்  படுதோல்வியை  சந்திக்கிறது . கை  சின்னத்துடன்  அதிகாரத்தில்  இருந்த  காங்கிரஸ்  மாநில  அரசியலில்  தொலைந்து  போகிறது

கிட்டத்தட்ட  ஜெகன்  மோகன் போன்றுதான்  TTV  அவர்களின்  நிலையும்  , ஆயிரம்  வழக்குகள் இருந்தாலும்  ,  தலைமை  பண்பு , மத்திய  அரசுக்கு  அடிபணியாமை ,  மாநில  நலனில்  அக்கறையும் , மாநில உரிமையை   விட்டு  கொடுக்க மாட்டார்   என்ற  நம்பிக்கையும்  சேர்ந்து  அரசியல்  வெற்றிடத்தை  நிரப்பும்  வலுவான  தலைவராக  உருவாக்கும் என்று   நம்புகிறோம் . .

மேலும்  அதிமுக  இரண்டாம்  கட்ட  தலைவர்களால்  பலம்  அடைந்த  இயக்கம் இல்லை . இது  ஒற்றை  தலைமையையும் , தொண்டர்களையும் பலமாக  கொண்ட  இயக்கம் .   இரண்டாம்  கட்ட தலைவர்கள்  என்று  சொல்லபடும்  பலரும்  மக்களை  சந்தித்து  வந்தவர்கள்  அல்ல . சசிகலா  உறவினர்கள் வீட்டையும் , போயஸ்  தோட்டத்து கேட்டையும்  சுற்றி பதவி  பெற்றவர்கள் .

இப்போது  நிர்வாக  குளறுபடிகளால் ஆள்பவர்கள்  மேலும் வலிமை  இழப்பார்கள் .  தேர்தல்  வரும்போது இன்று  ஆட்சியில்  இருக்கும்  EPS ,OPS  போன்றவர்கள் ரோசையா , கிரண்குமார்  ரெட்டி போன்று  காணாமல்  போய்  விடுவார்கள்.  மாநில  நலன்  சார்ந்த போராட்டங்களால்  TTV  வலுவடைவார். TTV  தினகரன்
 திமுக விற்கு  வலுவான  சவாலாக  விளங்குவார். அவரிடமே   அதிமுக  இயக்கமும் வந்து சேரும் . 

செவ்வாய், 26 செப்டம்பர், 2017

சசிகலா யார் ?

அவரே  ஆளுநர் ,
அவரே   மத்திய  சுகாதார  துறை  அமைச்சர் ,
அவரே  மத்திய உள்துறை  அமைச்சர் ,
அவரே  மாநில  தலைமை  செயலர் ,
அவரே  பொறுப்பு முதல்வர் ,
அவரே மாநில  சுகாதார துறை  அமைச்சர் ,
அவரே  மத்திய குற்றப்பிரிவு போலீஸ்,
 அவரே  இன்டெலிஜென்ஸ் ,
அவரே  மத்திய அமைச்சர் ,
அவரே  மாநில  சுகாதார  துறை  செயலர் .
அவரே  எய்ம்ஸ்  மருத்துவர் .
அவரே  அப்பலோ  நிர்வாகம் ,
அவரே  இந்திய  தேசம்  முழுதும் நிர்வகிக்கும் பிரதமர் .
அவரே  தமிழக அமைச்சரவை ,
 அவரே  z + பாதுகாப்பிற்கும் பொறுப்பு?
அவரே  சிங்கப்பூர் மற்றும் லண்டன்மருத்துவர்களின் பொறுப்பாளர் ?  

யார் இவர் ?


அவர்தான்   முன்னாள்  முதலமைச்சரின்  தோழி ,   சசிகலா  அம்மையார்.

அவர்  இத்தனை  அமைப்பிற்கும் பொறுப்பாக  இருந்தால் மட்டும் தான் அவரை  முதல்வரின் மரணத்திற்கு காரணம் என்று  சொல்ல  முடியும் . இவரிடம்  இத்தனை  அமைப்புகளும்  மண்டியிடுமா என்று  யோசிக்க  வேண்டும்?   அதனால்  அவருக்கு  என்ன  லாபம்? 

அவர்  செய்த  ஒரே  பாவம்  தன்னுடைய  உயிர்  தோழியின் (privacy )  அந்தரங்க  உரிமை  காப்பற்றபட  வேண்டும்  என்று  நினைத்துதான். மீடியாவிற்கு முதல்வர் உடல் நிலையை   லைவ் ரிலே மற்றும்  வீடியோ ,புகை படங்களை தந்து    TRP   ஏற்றமால் விட்டது தான் .







புதிய இந்தியாவின் பெற்றவர் யார் ?

இன்று மாதம்  ஒருமுறை  ஏகப்பட்ட  விளம்பரங்களுடன் "புதிய இந்தியா " பிறந்து விட்டது  என்று  கூறும்  பிரதமருக்கு  முன்னாள் , உண்மையில்  சத்தம்  இல்லாமல்  புதிய  இந்தியாவை உருவாக்க காரணமாக  இருந்தவர் மறைந்த  பாரத  பிரதமர் திரு நரசிம்மராவ்... அன்னிய  செலாவணி  பற்றாக்குறைக்கு   தங்கத்தை  அடகு வைத்த  தேசத்தில்  இருந்து , ஒரு  வலுவான பொருளாதார தேசமாக  உருவாக  காரணம் ஆனவர்.
இன்று அசுர  பலத்துடன் இருந்து  கொண்டு  பாஜக  சாதிக்க  முடியாததை , ஒரு  மைனாரிட்டி  அரசாங்கத்தை வைத்து  கொண்டு  சாதித்தவர். ஒரு சில  குற்றசாட்டுகள்   இருந்தாலும்  உண்மையில் புதிய  இந்தியாவின்  சிற்பி  இவர்தான் ..இன்றும்  சத்தம்  இல்லாமல்  சாதிக்க  முடியும்  என்பவர்களுக்கு உதாரணம் .

வரலாறில் இவருக்கான  சரியான அங்கீகாரம்   அளிக்கப்படவில்லை . மேலும்   காங்கிரஸ்  இயக்கமும்  இவருக்கான அங்கீகாரத்தை  அளிக்கவில்லை . இவர்  5.5 லட்சம் வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி  பெற்ற  நந்தியால்   தொகுதியில் இன்று காங்கிரஸ்  சில  நூறு  ஓட்டுக்கள் மட்டும் பெற்று டெபாசிட் இழந்ததே   காங்கிரசின்  பாவத்திற்கான  தண்டனை ..


வியாழன், 21 செப்டம்பர், 2017

தரமான வழக்கறிஞர்கள் இல்லை தமிழ்நாட்டில்

தரமான வழக்கறிஞர்கள் இல்லை தமிழ்நாட்டில் , ஏன் தினகரன் ,ஸ்டாலின் போன்ற திராவிட இயக்க  தலைவர்கள் MLA  தகுதி  இழப்பு  வழக்குகளுக்கு வட இந்திய  வழக்கறிஞர்களை வைத்து வாதாடுகிறார்கள்.தமிழக  சட்ட கல்லூரிகள் சரியில்லை, தமிழகத்தில் கல்வி  தரம்  இல்லை. நவோதயா பள்ளி வேண்டும், etc ,etc  -  எதிர் தரப்பு

தமிழக வழக்கறிஞர்கள் இந்திய  அளவில் எந்த  மாநில வழக்கறிஞர்களுக்கும்  குறைவானவர்கள் அல்ல ..தகுதி இழப்பு , சபாநாயகரின் அதிகாரம் போன்றவை அரசியலமைப்பு சட்டங்களின்  அடிப்படையை  கேள்வி கேட்கும்  வழக்குகளில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிறப்பாக கையாள்வதால் அவர்களை அணுக வேண்டியுள்ளது. சுப்ரீம் கோர்டடில் தமிழக வழக்கறிஞர்கள் ஓரளவு  இருந்தாலும்,  மிக பெரிய அளவில் இல்லாதது , நமது வழக்கறிஞர்கள் டெல்லியில் வசித்து , அங்கு பணிபுரிவதை சௌகரிய குறைவாக நினைப்பது தானே ஒளிய , திறமை குறைவு காரணம் இல்லை  என்று நினைக்கிறேன் .

எல்லா  பிரச்சனைக்கும் இறுதி முடிவு எடுக்க டெல்லி வந்து உச்ச நீதி மன்றத்தை அணுக வேண்டும்  என்ப பெரிய அநீதி . உச்ச நீதி மன்ற தென்னிந்திய கிளை சென்னையில் அமைப்பது தான் சரியான தீர்வாக  இருக்குமோ ஒழிய , கல்வி தரம் காரணம் இல்லை என்பது  எனது வாதம் .



செவ்வாய், 19 செப்டம்பர், 2017

அடிமைத்தனம் சுகமானது ,

அடிமைத்தனம் சுகமானது ,
முடிவெடுக்க  வேண்டிய  பிரச்சினை  இல்லை ..
முடிவுகளின் விளைவுகளை  பற்றி  சிந்திக்க  வேண்டியதில்லை .
யாருக்கும்   வழிகாட்ட  வேண்டியது  இல்லை .
எதிர்காலத்தை  பற்றி  பற்றி  பெரிதாக யோசிக்க  வேண்டியது  இல்லை.எல்லாவற்றையும் மேலே இருப்பவர் பார்த்து கொள்வார் என்று விட்டு விடலாம்
கட்டளைக்கு  அடிபணிவதே  ஒரே பணி .
பொருளாதார வளர்ச்சிக்கு  வாய்ப்பு இல்லை  என்று தெரிந்தால் ,   வாய்ப்புள்ள தலைமைக்கு விசுவாசத்தை   மாற்றி விடலாம்.
பிறர் நலம் பற்றி சிந்திக்க வேண்டாம் ..
வெற்றி ,தோல்வியின் பெரிய  பாதிப்பு இல்லை ..

தலைவனாக  இருப்பதுதான்   தலைவலி.

இந்த  கட்டுரை இன்றைய  ஆட்சியாளர்களை பற்றியது  அல்ல .. சுய  தொழில் செய்ய  பயந்து பெரும் நிறுவனர்களில் கடை நிலை  வேலையில் பொழுதை கழிப்பவருக்கானது மட்டும் என்று சொன்னால்  நம்ப வேண்டும் .

இப்போது இன்னொரு முறை படியுங்கள் ...

வியாழன், 14 செப்டம்பர், 2017

சுந்தர் பிச்சைக்கு வேற வேலை இல்லையா ?

சுந்தர் பிச்சை  ஒரு  அமெரிக்க தனியார் நிறுவனத்தின்  தலைமை  செயல்  அதிகாரி.   Facebook ல  பாத்தா  அவரு  என்னமோ  தமிழ்நாடு  எதிர்க்கட்சி  தலைவர் மாதிரி தெரிகிறார் .                                               ஜல்லிக்கட்டு ,நீட், ஊழல்  அரசியல் ,எல்லா  கருத்தையும்  போட்டு கீழ சுந்தர்  பிச்சை ன்னு  போட்டர்ரானுங்க .

அவருக்கு  ஆயிரம்  வேலை  இருக்கும் , இத  விட்டுட்டு தமிழ்நாடு நிகழ்வுகளுக்கு  கருத்து  தெரிவிச்சிட்டு  இருப்பாரா..
இதே  மாதிரிதான்  ஒரு க்ரூப்  எதாவது  தத்துவம்  எழுதி அப்துல் காலம் னு போட்டுட்டு இருந்தாங்க ...

தம்பி  கருத்த  நீங்களே  சொல்லுங்க  இதுக்கு  எதுக்கு  சுந்தர் பிச்சை அப்துல்கலாம் ன்னு அவங்கள இழுக்கிறீங்க ..




செவ்வாய், 12 செப்டம்பர், 2017

சசிகலா இல்லாத அதிமுக

அவருக்கு  அப்போது  29 வயது .காலம்  இரண்டு  வாய்ப்புகளை  முன்  வைத்தது.

வாய்ப்பு -1,
 ஒரு  அரசு  உயர்  அதிகாரியின் மனைவியாக , கணவருடன், குழந்தை குட்டிகள் பெற்று நிம்மதியான  ஒரு  உயர்  நடுத்தர  வாழ்க்கை ..

வாய்ப்பு -2
இன்னொன்று , உயிர்  தோழிக்காக  போராட்டங்களை  சந்தித்து , எண்ணற்ற துரோகிகளையும் , எதிரிகளையும் எதிர்  கொண்டு , தோழியின் லட்சியங்களையே , தனது  லட்சியமாக  கொண்டு , அவரது  அரசியல்  உயர்வையே தனது உயர்வாக  கொண்டு , உயிர் தோழியின் உடல்  நலம்  மற்றும்  மன  நலத்தையும்  காப்பாற்ற ,கணவர் , குடும்பம் ,குழுந்தைகள் அனைத்தையும்  தோழிக்காக தியாகம்  செய்ய  வேண்டிய  வாழ்க்கை.

இவர்  தேர்ந்து எடுத்தது  இரண்டாவதை.

தேர்ந்தெடுத்தது  மட்டும்  இல்லாமல்  33 ஆண்டுகள் பக்கம் நின்று ,மறைந்த  பிறகு கடைசி காரியங்கள் வரை  செய்தவர்.

எத்தனையோ  வழக்குகள் , சிறை  வாசம் , அப்ரூவர்   ஆகி  இருந்தால் அத்தனையிலும்  தப்பித்து  விடலாம்  என்ற  ஆசை  வார்த்தைகள் அத்தனையும்  தாண்டி  அந்த ஒற்றை  பெண்மணியின்  பக்க  துணையாக  நின்றார்.

எத்தனை   சாதாரண குடும்பத்தில் இருந்தவர்களை , ஜெயலலிதா  முன்  நிறுத்தி  பதவிகளை  வாங்கி  கொடுத்து  இருப்பார் . தவறு செய்த எத்தனை பேர்  ஜெயலலிதாவின்  கோபத்திற்கு  பயந்து , முன்  நிற்க  பயந்து இந்த அம்மாவிடம் சென்று காலில்  விழுந்து  காப்பாற்றுமாறு கெஞ்சி , இவரும் அம்மாவிடம் நல்ல  முறையில் சொல்லி  காப்பாற்றி  இருப்பார்.

கூட்டணி  கட்சி  தலைவர்களை  கேளுங்கள் ,  எத்தனை முறை  ஜெயலலிதாவிடம்  பேசினார்கள், எத்தனை  முறை  சசிகலாவிடம்  பேசினார்கள்  என்று ?  .பெரும்பாலும்  பேசி  முடித்து  , ஜெயலலிதாவிடம்   ஒரு தகவல்  மட்டும்   கூறி  அனுமதி  வாங்குவார்கள் ...

இன்று  வேண்டுமானால்  நீங்கள்  அண்ணா  திமுகவில்  இருந்து  நீக்கலாம் .. ஆனால்  நாளை  அதிமுக  வரலாற்றை  எழுதும்  போது , ஜெயலலிதா  என்ற  ஆளுமையின்  வெற்றியை  இந்த  பெண்மணியின்   தியாகத்தை   ஒதுக்கி எழுத முடியாது .








வியாழன், 7 செப்டம்பர், 2017

நீட் விலக்கு போராட்டங்கள் -நியாயமா ?

பாஜக  நண்பர்  :- ( நக்கலாக)  அனிதா மறைவுக்கு பிறகு, தமிழ்நாட்ல  எங்க பாத்தாலும் நீட் ,நீட் , ஆர்ட்ஸ் ,சயின்ஸ்  படிக்கிற  பசங்க  எல்லாம்   strike  பன்றாங்க , ஆட்டோ  டிரைவர் , பொட்டி கடைக்காரர்  எல்லாம்  நீட்  விலக்கு பத்தி பேசறாங்க ...எல்லாரும்  இனிமே  படிச்சு  டாக்டராக  போறாங்களா  என்ன ?

இன்னொரு  நண்பர்  :- நான்  கூட  முப்படைகளில்  எதிலும்  வேலை  பார்க்கவில்லை , அதுக்குக்காக  இந்தியா  பாகிஸ்தான்  யுத்தம்  வந்தால்  எனக்கு என்ன என்று  இருக்கட்டுமா  இல்லை, இந்தியனாக சப்போர்ட் செய்யணுமா  ?
இது எல்லாம்  தங்களின்  உணர்வையும் ,கோபத்தையும்   வெளிப்படுத்தும்  தருணங்கள் , நீங்கள்  உணர்வுகளை  புரிந்து  கொள்ளுங்கள் , அதை  விடுத்து டாக்டராக போறார்களா என்று  நக்கல்  அடிக்கும்  வரை  தமிழகத்தில்  நீங்கள்   வளர  முடியாது .


புதன், 30 ஆகஸ்ட், 2017

மும்பை பெருமழை - உணர்த்தும் உண்மைகள்



உண்மை -1  :- ஒவ்வரு  பெருமழையும் அது  அமெரிக்காவின்  ஹூஸ்டன்  நகராகட்டும் , இந்தியாவில்  மும்பை , சென்னை  போன்ற  நகரங்களாகட்டும் , என்னத்தான்  அறிவியல் , முன்னேற்றம்  என்று  பெருமை  கொண்டாலும்  இயற்கைக்கு  முன்பு  இன்றும்  மனிதன்  மண்டியிட்டுதான் ஆக வேண்டும் என்பதை  உணர்த்துகிறது .

உண்மை-2    ஓலா ,உபேர்  போன்ற  நிறுவனங்களில்  நிறைய  பகுதி  நேரம் மற்றும்  தொழில் முறை  இல்லாத  ஓட்டுனர்கள்   உள்ளனர். இது  போன்ற  பேரிடர்  சமயங்களில்  கைவிட்டு  விடுகிறன்றனர். வாடகையும் 3 மடங்கு  முதல்  10 மடங்கு  உயருகிறது . அப்போது  கை கொடுத்தவர்கள் கருப்பு , மஞ்சள் (காலா,பில்லி ) டாக்ஸி  வாகனங்களும் , ஓட்டுநர்களும்தான்..அரசனை  நம்பி  புருஷனை  கை விட்டது  போல் ஓலா , உபேர்  போன்ற  பெரு  நிறுவனங்களை  மட்டும்  நம்பி இவர்களை  முற்றிலும்  புறக்கணிக்காமல்  இவர்களின் (existence ) இருப்பையும்  உறுதி  செய்ய வேண்டும் .

உண்மை-4 :- எப்போதும்  விமர்சிக்கப்படும் மாநகர  பேருந்து  சேவை (BEST ) பெருமழையில் கைவிடவில்லை . கடுமையாக  பணியாற்றி ஓரளவு மக்களை வீட்டை  அடைய  செய்ததும்  இவர்கள் தான் . சில பேரிடர்  தருணங்களில்  அரசு  சேவை என்பது  கைவிடாது என்பதை  மனதில் பதித்தார்கள் .

உண்மை -5 :- கடும்மழையிலும் அசுரத்தனமான  உழைப்பை  நல்கிய  மும்பை  காவல்துறையும் பாராட்டத்தக்கது. இவர்கள் இல்லாவிட்டால் இன்னும் நிலைமை  மோசமாக  ஆகி  இருக்கும்.

உண்மை-6 :- KFC ,PIZAA  HUT ,MCdonalds போன்ற   ஒரு  துளி உணவை கூட தரவில்லை. ஆனால்  தெருவோர  வியாபாரிகள் வடபாவ் , இட்லி போன்றவற்றை இலவசமாக  தந்தனர் ..

உண்மை-7 :- ஹூஸ்டன்  போன்ற  முன்னேறிய  நாடுகளில் பேரிடரை  பயன்படுத்தி  கொள்ளைபடிப்பதை தடுக்க இரவு  நேர  ரோந்து தீவிரப்படுத்தப்பட்டது என்ற  செய்தி  வந்தது.
 மும்பையில்  விமான  நிலையத்துக்கு  அருகில்  இருக்கும்  சேரி  பகுதிகள். பெரும்பாலான செல்வந்தர்கள்  மற்றும்  உயர்  நடுத்தர  மக்கள்   இந்த  சேரிகளினால் மும்பை  அழகு குறைகிறது  என்று வருத்தமும்  அடைவார்கள்.
 ஆனால்  மும்பை பெருமழையில் ,  விமான  நிலையம்  அருகில்  இருக்கும்  சாலைகளில் இவர்களின் வாகனங்கள் பல  மணி  நேர போக்குவரத்து  நெரிசலில் சிக்கி நகர முடியாத நிலையில்  இந்த   குடிசைவாசிகள் தான்  பிஸ்கட்  ,டீ போன்றவை  இலவசமாக  வழங்கி பசி ,தாகம்  தீர்த்தனர்.இது  வளர்ந்து  வரும்  நாடுகளின்  ஏழை மக்களின்  மனிதம்  இன்னும்  நீர்த்து  விடவில்லை  உணர்த்திக்கிறது.

இயற்கை பேரிடர்கள்  நம்மில்  உள்ள  மனிதத்தை உணர  வைக்கின்றது.



செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

என்ன செய்தது திராவிடம் ?


திராவிட கட்சிகள்  என்ன  செய்தது  தமிழகத்துக்கு ? தமிழக  பாஜக  கேள்வி.

திராவிடன் :- உங்கள்  அகில  இந்திய  தலைவர்களின்  சிலரின்  பெயர்களை  கூறுங்கள்  பார்ப்போம் ?

பக்த் :-  நரேந்திர "மோதி ", அமித் "ஷா" , வெங்கையா "நாயுடு ", சுஷ்மா "ஸ்வராஜ் "

திராவிடன் :- உங்கள்  மாநில  தலைவர்கள்  சிலரின்   பெயர்களை  கூறுங்கள்  பார்ப்போம் ?

பக்த் :- தமிழிசை , பொன். ராதாகிருஷ்ணன் , இல.கணேசன் .

இதுதான்  திராவிடத்தின்  சாதனை. தமிழிசை  நாடார் , பொன்ராதாகிருஷ்னன் நாடார், இல  கணேசன்  அய்யர்  ஆகாமல் ..

பொதுவெளியில்  ஜாதி  பெயரை  கூறுவது ஒரு  அநாகரீகம் என்ற            சிந்தனையை  தமிழகத்தில்  உருவாக்கியது  திராவிட கட்சிகளே.

அன்புடன்
 மக்கள்  என்  பக்கம்


திங்கள், 21 ஆகஸ்ட், 2017

இப்ப தெரியுது உங்களை எல்லாம் என் இப்டி நடுத்துனாங்கன்னு?

டிசம்பர் மாதம் ,அம்மா  இறந்து  16 ம் நாள், நீங்கள்  அனைவரும்  இணைந்து  சசிகலாவிடம்  நீங்கள்  , நல்லவரா , கெட்டவரோ ?, அம்மாவுடன்  33 ஆண்டுகள்  இருந்து  கழக  நிர்வாகத்தையும் , அம்மாவையும் கவனித்து  கொண்டு  இருந்திர்கள் ,இப்போது  அம்மா  இறந்து  விட்டார்கள் , நாங்கள்  ஒன்றிணைத்து  கழகத்தை  பார்த்து  கொள்கின்றோம் . எங்களுக்கு  பொது  செயலாளர்  யாரும்  தேவை  இல்லை , நாங்கள்  வழிகாட்டுதல்  குழு  அமைத்து  கட்சியை  பார்த்து  கொள்கிறோம்  என்று  கூறி  விலக்கி  வைத்து  இருந்தால் நீங்களும்  மானஸ்தர்கள் , ஒருவேளை  உங்களின் ஒற்றுமையை  பார்த்து  சசிகலாவே விலகி  இருந்து  இருப்பார் ..

ஆனால்  நீங்கள்  என்ன  செய்திர்கள் , மாவட்டம்  வாரியாக  தீர்மானம்  போட்டு  அம்மா  காப்பாத்துங்க , அம்மா  காப்பாத்துங்க என்று  போயஸ்  வீட்டில் முன்பு  அலறினீர்கள் ..

ஒவ்வருவரும்  கட்சியில் அடுத்தவர்  கை  ஓங்கி  விடக்கூடாது  என்று பொது  செயலாளர்  ஆகுங்கள்  என்று  கூறினீர்கள் . தீர்மானம்  இயற்றி    ஏற்று  கொள்ளுமாறு  கெஞ்சினீர்கள் .

பிறகு  ஒவொரு  அமைச்சராக  ஓபிஸ் டம்  சென்று கட்சி , ஆட்சி  ஒருவரிடம்  இருக்க  வேண்டும் என்று  அவரையும்  பதவி  விலக  வைத்தீர்கள் ..
ஒபிஸ்  பிரிந்த  போது  எல்லாரும்  அவர்கூட  போய்  அவரை  ஆதரித்து  இருக்கலாம் ..அதுவும்  செய்யல . அப்பவும்  அந்த  அம்மா  ஜெயிலுக்கு  போறதுக்கு  முன்னாடி  உங்களை  முதலமைச்சர்  ஆகவும்  ,அமைச்சர்  ஆக்கியும் சென்றார்கள் ..

அப்போது  எல்லாம்  சுய  புத்தி  இல்லாமல்  செய்திர்களா  ? இல்லை  இப்போதுதான்   டெல்லியில்  இருந்து  புத்தி  வாங்கி  வந்திர்களா ?

சும்மா  இருந்த  தேரை  இழுத்து தெருவில்  விட்ட  மாதிரி , வீட்டில் இருந்த  அந்த  அம்மாவை  கூட்டி  வந்து  பொது  செயலாளர் , முதல்வர்  ஆக்குகிறேன்  என்று சொல்லி ஜெயிலுக்கு  அனுப்பி.. இப்ப சசிகலா  யாரு ?தினகரன்  யாரு ன்னு  கேக்குறீங்க ??

உலக  நடிப்புடா  சாமி ? 
அப்ப  கூட  ஜெயலலிதா அம்மா ஏன்  இந்த  மந்திரி , கழக  நிர்வாகிகளை  அடிக்கடி  மாத்ரங்க ? காலிலேயே  விழுந்து  இருக்குமாறு வைத்து   இருந்தார்கள் என்று யோசிச்சேன் .... இப்ப  தெரியுது    உங்களை  எல்லாம்  என் இப்டி  நடுத்துனாங்கன்னு? 




வியாழன், 17 ஆகஸ்ட், 2017

காவியில் கரையாது கழகம்..

கட்சியை  ஒன்றிணைக்க  யாரிடம்  போய்  நிற்கிறீர்கள் ....
 அவர்கள்  எந்த விதத்தில்  இந்த  இயக்கத்துடன்  தொடர்புடையவர்கள்  ..

நீங்கள்  யார் இந்த  இயக்கத்தை  இணைக்க  பேச்சு வார்த்தை  நடத்த ?

புரட்சி  தலைவருடன்  திமுக விலிருந்து  பிரிந்து  வந்தவர்களா ?

திண்டுக்கல்  இடை  தேர்தலில் மாய  தேவரின்  வெற்றிக்கு  புரட்சி தலைவருடன்  பணியாற்றியவரா ?
'
புரட்சி  தலைவரின்  அமைச்சரவையில்  இருந்தவர்களா ?

புரட்சி  தலைவி  சேவல்   சின்னத்தில்  போட்டியிட்ட  போது  ஆதரித்தவரா ?

புரட்சி  தலைவி  சட்ட  மன்றத்தில்  தாக்க பட்ட போது  காத்து   நின்றவரா ?

 இரட்டை  இலையை  மீட்டேடுத்து , மருங்காபுரி , மதுரை  தொகுதி  இடைதேர்தலில்  களம்  இறங்கியபோது துணை  நின்றவரா ?

புரட்சி  தலைவி  ஆளும்  பொழுதும் , எதிர்க்கட்சியாக  இருக்கும்  பொழுதும்  துணை  நின்ற  சட்டமன்ற  உறுப்பினரா  இல்லை  மாவட்ட  கழக  செயலாளரா ?

பொய்  வழக்குகளை  போட்டு  புரட்சி  தலைவி  சிறை  சென்ற  போது  உடன்  சென்றவரா ?
திமுக  ஆட்சியை  எதிர்த்து  அதிமுக போராடிய  போது  கழகத்துக்காக சிறை  சென்றவரா ?

அண்ணா  திராவிட  முன்னேற்ற  கழகத்தில் , அண்ணாவை  பற்றி உங்களுக்கு ஏதாவது  தெரியுமா  இல்லை  திராவிடம்  பற்றி  தான்  தெரியுமா ?

 தமிழகத்தின்  மீது  அக்கறையில்  என்றால் , தமிழர்களின்  வரலாறு  தெரியுமா ? சோழர் , சேரர்  பாண்டியரின் வீரம்  பற்றி தெரியுமா ?

தமிழகத்தின்  வாழ்வாதார  பிரச்சினைகளான  காவேரி , முல்லை  பெரியார்  போன்றவை   பற்றித்தான்  தெரியுமா ?

யாருக்கும்  இல்லாத  அக்கறை  உங்களுக்கு  ஏன்  வந்தது ?

 உங்களுக்கு  தெரிந்தது  39 நாடாளுமன்ற  உறுப்பினர்கள் , 234 சட்டமன்ற  உறுப்பினர்கள் , மாட்டுக்கறி , விநாயகர்  ஊர்வலம் , பிரியாணி  குண்டாண் அவளவுதான்.

உங்களுக்கு  அமைச்சர்கள் ,நாடாளு  மன்ற  உறுப்பினர்கள் ,சட்ட மன்ற  உறுப்பினர்கள் , சில  நிர்வாகிகள்  கட்டுப்படலாம் புரட்சி  தலைவர் மற்றும்  புரட்சி  தலைவியின்   உண்மை  தொண்டர்கள் என்றும் கட்டுப்பட  மாட்டார்கள் ...

அடுக்குமறைக்கு அஞ்சாத  தலைவனே  தேவை ...மண்டியிட்டு மன்னிப்பு  கேட்பவர் அல்ல....எங்களின்  தலைவரை  நாங்கள்  தேர்ந்தெடுப்போம் ..
தமிழக  வரலாற்றில்  வேலூர்  புரட்சியை  போல்  , மேலூர்  எழுச்சிக்கும் இடம்  கிடைக்கும் ..

காவியில்  கரையாது கழகம்..


 ..

வியாழன், 10 ஆகஸ்ட், 2017

அதிமுக அடுத்த கட்ட நகர்வுகள் என்ன?


அதிமுக  அடுத்த  கட்ட  நகர்வுகள் என்ன

இப்போது  டெல்லி  கட்டளையின் படி தினகரனை வெளியேற்றி  விட்டார்கள் . அடுத்ததாக  சசிகலாவும்  நீக்கபடுவார்.  எதிர்ப்பவர்கள் மிரட்டப்படுவார்கள் விரைவில்  பன்னீர்செல்வம் அணியும்  இணையும் . இரட்டை  இலையை திரும்ப  தருவார்கள். அதுபோல்  மத்திய  அமைச்சரவையிலும்  இணைவார்கள்.

உள்ளாட்சி தேர்தலில்  இவர்களை  மிரட்டி  30- 40 %  இடங்களை பிஜேபி க்கு வாங்குவார்கள். நாடாளுமன்ற  தேர்தலில்  20 இடங்களை  பிஜேபி பெறுவார்கள்.  இரண்டு டாடா  ஏஸ்  வாகனத்தில்  தமிழ்நாடு பிஜேபி கட்சியினர்  மொத்தத்தையும் ஏற்றி விடலாம்  . அந்த  கட்சிக்கு  பாடுபட்டு  உழைத்து அதிமுக  தொண்டர்கள்  வெற்றி  பெற  செய்ய  வேண்டும்.அதிமுக   தொண்டர்கள்  உழைப்பில்  வெற்றி  பெற்றால் சரி  இல்லை  என்றால் , தாமரையில் கட்சியை  இணைக்கும்படி  வலியுறுத்துவார்கள் ... மிரட்டலுக்கு  பயந்து  ஒன்றான  இவர்கள் இன்னொரு  மிரட்டலுக்கு பயந்து கட்சியை  பிஜேபியுடன்  இணைத்து விடுவார்கள்.

  3 1/2 வருடம்  சம்பாதித்து  விடுவார்கள்  மற்றபடி   அடுத்த  முறை  கவுன்சிலர்  பதவி  தேர்தலில் நின்றால்  கூட  அமைச்சர்களாக இருப்பவர்களுக்கு  வெற்றி   கிடைக்காது.

திங்கள், 7 ஆகஸ்ட், 2017

ஒரு கரைவேட்டியின் கடிதம்

  அன்புள்ள அதிமுக   தலைவர்களுக்கு ,

                  அண்ணா  திராவிட  முன்னேற்ற  கழக கரை  வேட்டி எழுதும்  கடிதம் .. என்னை  கட்டியவன்   லட்சத்தையும் , கோடியையும் எதிர் பார்ப்பவனோ, இல்லை  அமைச்சர் , சட்டமன்ற , பாராளுமன்ற  , உள்ளாட்சி  அதிகாரத்தை  அனுபவிக்க  நினைத்தவனோ  அல்ல , இவன்  கட்சியின்  கடைநிலை  தொண்டன். இவனுக்கு  நான்  ஒரு  அடையாளம் . கரை  வேட்டியை  கட்டி  விட்டால்  அவனுக்கு  மாற்று  கட்சியை சேர்ந்த  உறவினர்களோ ,நண்பர்களோ  இரண்டாம் பட்சம்தான்  .நான்தான்  பிரதானம் . எனக்காக  அனைவரிடமும் சண்டையிட தயாராகி  விடுவான். உள்ளூர் மக்கள் பணிக்காக கரை வேட்டியுடன் சட்டமன்ற ,ஒன்றிய  நிர்வாகிகளை  சந்திக்கும்  பொழுது தரும்  சிறு மரியாதைதான்  அவனது அங்கீகாரம்.

புரட்சி  தலைவரால்  ஈர்க்கப்பட்டு  இயக்கத்தில்  இணைந்து , தன் வாழ்க்கையை  இயக்கத்துக்காக  அர்பணித்தவன்  அவன்..புரட்சி தலைவர் மறைவின்போது   இரண்டாக  உடைந்த  போது கூட அவனுக்கு இயக்கம்  இணையும் என்ற ஒரு  நம்பிக்கை  இருந்தது. அவனது  நம்பிக்கை  பலித்து  புரட்சித்தலைவியால்   இயக்கம் அசுர  பலம்  அடைந்தது. தேர்தல்  தோல்விகள் எந்த  நாளும் அவனது  நம்பிக்கையை  பாதித்தது  இல்லை ..மீண்டு  வருவோம் என்று  தெரியும் ..

ஆனால்  இன்று  ஆட்சி  இருக்கிறது ... ஆனால் அவன்   நம்பிக்கை இழந்து  கொண்டு  இருக்கிறான்.. குரங்கிடம் அப்பம்  பிரிக்க சென்ற  பூனைகளின்  கதையாகி  கொண்டு  இருக்கிறது இன்றைய அதிமுக வின்  கதை ..உங்களின்  சகோதர  சண்டையை நீங்ள்  பேசி  தீர்த்து கொள்ளுங்கள் .. குரங்கிடம் சென்ற  அப்பம்  திரும்பி வராது  என்பதை  மனதில் வையுங்கள் .

இன்றும்  இயக்கம்  இரண்டாக  இருக்கலாம் , மூன்றாக  இருக்கலாம் , ஆனால்  கரை  வேட்டி  கட்டிய  தொண்டன்  வேறு எங்கும் செல்லவில்லை . 4 ஆண்டுக்கு  பிறகு  ஆட்சி  முடிந்து விடும். அதிகாரம் கையை  விட்டு  போய் விடும்  ,நீங்கள்  திரும்பி  பார்க்கும் பொழுது அங்கு தொண்டர்கள் இருக்கமாட்டார்கள். என்னை    கட்டிய தொண்டனை  வேறு ஒரு  வேட்டி  கட்ட  வைத்து  விடாதீர்கள் .

நீங்கள் ஒருவருக்கொருவர்  விட்டு  கொடுத்து விரைவில்  இணையுங்கள் , அப்போது  புரட்சி  தலைவர் , புரட்சி  தலைவியின்  காலத்தை  போல்  பெருமையுடன் கரை  வேட்டியை  கட்டி மக்கள்  பணிக்காக  தயாராக இருப்பான் என்னுடையவன் .

அன்புடன் ,

அதிமுகவின்  கரை வேட்டி ..



வியாழன், 3 ஆகஸ்ட், 2017

பாஜகவின் பலி கடாவா அதிமுக ?


பாஜக  இந்தியா  முழவதும்  தீண்டத்தகாத  கட்சியாக  இருந்த போது  பாஜக வை  கூட்டணியாக  இணைத்து  வெற்றி பெற்றது  சிவசேனா ..இன்று  சிவசேனாவிற்கே கொஞ்ச  கொஞ்சமாக  ஆப்பு  வைத்து  விட்டார்கள்   பாஜகவினர் .பாஜக  கூடாரத்தில்  புகுந்த  ஒட்டகம்  கொஞ்சம்  கொஞ்சமாக  உள்ளிருப்பவர்களை வெளிய  தள்ளி விடுவார்கள்.

பாஜக   அதிமுக இரு அணிகளையும்  இணைத்து  இரட்டை  இலையை  திரும்ப  தந்து  கூட்டணி வைத்து 2019 தேர்தலில்  வெற்றி  பெறலாம்  என  நினைக்கிறார்கள். அவர்களின்  ஆலோசனைப்படியே  நடந்தாலும் எப்படியும்  20 பாராளுமன்ற தொகுதிளை   மிரட்டி  வாங்குவார்கள் . பிறகு  சட்ட மன்ற  தேர்தலில் 80- 100 தொகுதிகள்  என்று கொஞ்சம்  கொஞ்சமாக  அதிமுகவை  தின்று தின்று  பாஜக வளரும் .

 சசிகலா குடும்பதிற்கு   ஒட்டு  விழாது  என்று  கழட்டி  விடலாம்  என்று  சொல்லும்   அமைச்சர்களே  , பாஜக   கூட  சேர்ந்து  மட்டும்  லட்சக்கணக்கில்  ஒட்டு  வாங்க முடியுமா?

  மாநில  அதிமுக  அரசை   பாஜக  தலைவர்கள்  தாறுமாறாக  விமர்சிக்கிறார்கள் ..ஆனால்  தவறி  கூட  மத்திய  அரசை விமர்சிக்க  பயப்படுகிறார்கள் . இந்த  நிலைமையில்  சென்றால் அதிமுகவை தமிழக  பாஜக  வளர்ச்சிக்கு  பலியிட தயாராக  இருக்கிறார்கள்.

இன்றைய  நிலையில்  தொண்டர்களையும் ,  ஓட்டுக்களையும்  தக்க    வைக்க வேண்டுமானால்  பாஜக  எதிர்ப்பு  நிலையே  எடுபடும் .




புதன், 2 ஆகஸ்ட், 2017

வாழ்க்கை மனிதர்களுக்கானது

அந்த  காலம்  தான்  எவ்வளவு  கடினமானது ...

விவசாயம் மட்டும்  தான்  பெரும்பாலானவருக்கு  தெரிந்த  தொழில் .அதுவும் பெரும்பாலும்  ஆட்களையே சார்ந்தது ..காலையில் வயலுக்கு சென்ற அப்பாவால் இரவில் தான் வீட்டுக்கு  வர  முடிந்தது , நடவு ,அறுவடை  என்றால்  மாதகணக்கில் உழைப்பு  தேவை பட்டது .

போக்குவரத்து  என்றால் பெரும்பாலும் பேருந்து  அல்லது  ரயில்தான் , நாளின்  பெரும்  பகுதியை  பேருந்துக்கு  காத்து  இருந்தே கழிந்தது .
 கார், மோட்டார் சைக்கிள் வெகு  சிலரிடம்  இருந்தது  அதுவும்  தினசரி பயன்பாட்டுக்கு அல்ல .. ..நீண்ட  தூரம்  என்றால் இரண்டாம் வகுப்பு ரயில் அல்லது திருவள்ளுவர்  பேருந்துகள்  மட்டும் . சொகுசு ஆம்னி பஸ்கள்  கிடையாது. விமானம்  என்றால்  மத்திய  தர குடும்பத்துக்கு கீழிருந்து பார்பதுக்கானது , பயணத்துக்கானது அல்ல.

புதிய  பாடலுக்காக ஒரு  வாரம் ஒளியும் ,ஒலியும் காத்து இருக்க  வேண்டும்.. ரஜினி , கமல்  பட டிக்கெட்  என்றால்  விடியற்காலை  திரை அரங்குக்கு  சென்றால்  மதிய கட்சிக்கான டிக்கெட் கிடைக்கும்.

தகவல் தொடர்பு  என்றால்  தந்தியும், landline தொலைபேசி யும்தான். வெளியூரில் இருந்தால் நெருங்கிய  உறவினர் இறப்பையும் இன்லேண்ட் லெட்டரில் தான்  தெரிந்து அழுதவர்  இருக்கின்றனர் .

பெரிய  அறுவை  சிகிச்சை  என்றால் அரசு மருத்துவமனையே கதி ..உங்களது  நோயை  விட  அரசு  மருத்துவமனை  அதிகமாக  பயமுறுத்தியது.
 எந்த ஊருக்கு  கிளம்பினாலும்  கட்டி சாதம் கையில்  எடுத்து போய்
கொண்டு  இருந்தோம். வாரம்  ஒருமுறை  ஹோட்டல்  எல்லாம்  கிடையாது .எப்போதாவது  அத்தி பூத்தாற்போல்  நிகழும்   நிகழ்வு .

புதிய  உடைகள்  தீபாவளிக்கு  மட்டுமே எடுக்க  முடிந்தது .
 கோடைகாலத்தில்  A/C கிடையாது . மின்சாரமும்  தொடர்ந்து  இருக்காது .
குடும்பத்தில் யாராவுது  ஒருத்தர் மட்டுமே  வேலை பார்த்ததால்   வருமானம்  குறைவு ...வாழ்க்கையில் எல்லாவற்றையும் பொறுத்து  கொண்டுதான் போய்  கொண்டு  இருந்தோம் ..

மொபைல்  கிடையாது , மால்  கிடையாது , இணையம்  கிடையாது facebook கிடையாது ,,இத்தனை  தொலைக்காட்சி சேனல்கள் கிடையாது

ஏகப்பட்ட  கிடையாதுகள் ..ஏகப்பட்ட வசதி குறைவுகள் , கடுமையான பொருளாதார  நெருக்கடிகள்  இத்தனையும் தாண்டி  என்  இன்றைய  மனிதன்  அந்த  காலம்  அழகானது  என்று சொல்கிறான் ..
ஏனென்றால்

மனிதர்கள் , மனிதர்கள் , மனிதர்கள் ..
அன்றைய உங்கள்  வாழ்க்கை நிறைய மனிதர்களால்  நிரம்பி  இருந்தது  ..நண்பர்களாக , உடன்  பிறந்தவர்களாக , உறவினர்களாக , பக்கத்து வீட்டுகாரர்களாக  நிறைய  மனிதர்கள் உங்களின்வாழ்க்கையில்  இருந்தனர் ,  சுக ,துக்கங்களில் பங்கெடுத்தார்கள் ..உரிமையுடன் உங்களிடம்  கோபித்து கொண்டார்கள்  , சண்டை போட்டார்கள் .. உங்களிடம்  அவர்களுக்கான  நேரமும்  இருந்தது .
நிறைய மனிதர்கள் , நிறைய  மகிழ்ச்சி , நிறைய  கண்ணீர் , நிறைய நிகழ்வுகள் ..நிறைவான  வாழ்க்கை ..

இன்று உங்களுக்கு  நேரமும்  இல்லை , உங்கள்  வாழ்க்கையில்  மனிதர்களும்  இல்லை ...

மனிதர்களை நேசியுங்கள் .வாழ்க்கையை மனிதர்களால் நிரப்புங்கள் .


LIVE IS BEAUTIFUL







செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

சசிகலாவினால் முடிந்தது , காங்கிரஸினால் முடியவில்லை


பிக் பாஸ்  வீட்டில்  100 நாட்கள்  பல கேமெராகள் கண்காணிப்பில் , நடிக்க  முடியாமல் உண்மையான கேரக்டர் வெளிப்படுத்தி விடுகிறார்கள் ...
33 ஆண்டுகள்  ஒரே வீட்டில்   புரட்சி தலைவி  ஜெயலலிதா  போன்ற புத்திகூர்மையான, பல்வேறு  தரப்பு மக்களிடம்  பழகிய ,துரோகத்தை வென்ற,  பெண்மணியின் முன்  தொடர்ந்து  நடிக்க முடியுமா ? அங்கு  உண்மையான  நட்பும்  , அன்பும் , பாசமும் மட்டும்  இருந்ததால் தான்  திருமதி  சசிகலா  அவர்களால் நீடிக்க  முடிந்தது .

 
ஒரு  ராஜ்ய  சபா MP பதவிக்கு, 45 சட்ட  மன்ற  உறுப்பினர்களை  டெல்லியின் வியூகத்தில்  இருந்து  காப்பாற்ற  நூறாண்டு  கண்ட காங்கிரஸ் கட்சிக்கு நாக்கு  தள்ளுகிறது ..பிஹாரில்  இன்னும்  மோசமான  அடி ..... ஆனால்  டெல்லி யின் வியூகத்திற்கு  எதிராக ஒரு  மாநில  ஆட்சியையே  காப்பாற்றி  கொடுத்தவர்  சசிகலா .


இந்த  ஆட்சி  இருக்கட்டும் ,போகட்டும் , என்ன  வேண்டுமானால்  நடக்கட்டும் ..ஆனால்  அன்று டெல்லி வியூகத்தை  உடைத்து , ஜெயித்தவர்  அவர் அது  வரலாறு ..

சசிகலாவினால் முடிந்தது , காங்கிரஸினால் முடியவில்லை .
 

புதன், 26 ஜூலை, 2017

நீட் ..சாதித்து இருக்குமா திமுக ?

நேற்றைய  புதிய  தலை முறை  நிகழ்ச்சியில்  நேர்பட பேசு  நிகழ்ச்சியில்  திமுக  சில  குற்றச்சாட்டுகளை  வைத்தது ..அதற்கான சில  விளக்கங்கள்

குற்றச்சாட்டு 1.  2011 க்கு  பிறகு  தமிழகத்தில்  கல்வி  தரம்  குறைந்து  உள்ளது . ... 2010 திமுக  அரசால்  சமசீர்  பாடதிட்டம்  அறிமுக  படுத்த  பட்டது ..அப்படியானால்  திமுக வால்  கொண்டு  வரப்பட்ட  சமசீர் கல்வி  முறை  தரமற்றது  என்கிறாரா  திமுக  உறுப்பினர் ..எந்த  ஒரு பாட  திட்டத்தையும்  சில  ஆண்டுகள் அமுல் படுத்தி  , அதன்  நன்மை , தீமைகளை  பரிசீலித்து , அதன்  பிறகே  மாற்றம்  கொண்டு  வர  முடியும் ..அதையே  இந்த  அரசு  செய்து  வருகிறது .

குற்றச்சாட்டு 2.  கலைஞர்  முதலமைச்சராக  இருந்தால் நீட்  தேர்வு  போன்ற  மாநில  நலன்  சார்ந்த  விஷயங்களை சாதித்து  இருப்பார் ... திமுகவுக்கு  காங்கிரஸ் கூட்டணி  கட்சி ..அப்போதே  மாநில  நலன் சார்ந்த  காவேரி  நடுவர்  நீதி  மன்ற  தீர்ப்பை  அரசிதழில்  வெளியிட  செய்ய  முடியவில்லை .. பாஜக  அதிமுகவின்  தோழமை  கட்சியோ  , கூட்டணி  கட்சியோ  அல்ல ..இன்று  பாஜக  அதிமுக  MP களின்  ஆதரவை  எதிர்பார்த்தும்  இருக்கவில்லை ..இந்த  நிலையில்  பாஜக வை  அனுசரித்து  நீட் போன்ற விஷயங்களில்  காரியம்  சாதித்து  கொள்வதே  புத்திசாலி  தனமான  அணுகுமுறை  ஆகும் ..


குற்றச்சாட்டு 3.  உச்சநீதிமன்றத்தை   மாநில  உரிமையில்  தலையிடுகிறது  என்று  அணுகவில்லை ..
பள்ளி  கல்வி  மாநிலங்களின்  பட்டியலிலும் , மருத்துவ மற்றும்  உயர்கல்வி பொது பட்டியலிலும்  வருகிறது.. பள்ளி  கல்வியின்  அதிகாரம்  12 ஆம்  வகுப்பு  தேர்ச்சி  முடிவுகளுடன் முடிவடைந்து  விடும் .மருத்துவ மாணவர் சேர்க்கை பொது பட்டியலுக்கான உரிமையில்  வருகிறது ..நாம்  இன்று மருத்துவ கல்விக்கான அனுமதியை  மாநில  பட்டியலில் வரும்  என்று கூறி , அதை  உறுதி  செய்ய  வேண்டும்  என்று  உச்ச  நீதி  மன்றத்தினை  அணுகினால்  எந்த  அளவு பயனளிக்கும் என்பது  கேள்விக்குறியே ..
மத்திய  அரசின் உதவியுடன் ஜல்லிக்கட்டு  போன்று  அவசர  சட்டம்  இயற்றி ஜனாதிபதி அனுமதி பெற்று , உச்ச  நீதி மன்றத்தில் முறையாக  விலக்கு  பெறுவதே  சரியாக  இருக்கும் .

நீட்  நிரந்தர  விலக்கு  பெற   வேண்டும்  என்பதே  புரட்சி  தலைவியின் கோரிக்கை  அதை  நோக்கியே  அதிமுக   அரசு  பயணிக்க வேண்டும் .

வியாழன், 20 ஜூலை, 2017

மீண்டு வாருங்கள் உலக நாயகரே

ஒரு காலத்தில்  கமலஹாசனின்  திரைப்படங்களின்  ரசிகன்  நான். அவரது  சிப்பிக்குள் முத்து , தேவர்  மகன் , புன்னகை  மன்னன்  போன்ற  படங்களுக்கு மிக நீண்ட  வரிசையில்  நின்று  டிக்கெட் வாங்கியவர்களில் நானும் ஒருவன் ..
ஆனால் , கடந்த  பத்து  ஆண்டுகளாக அவரது  இமேஜ் அவரது  சுமையாகி  விட்டதோ  என்று  தோன்றுகிறது .. கலைஞனாக  கமல் அமீர்  கானை  விட மிக பெரிய திறமைசாலியாக  இருக்கலாம்  . ஆனால்  கடந்த சில ஆண்டுகளாக லகான்,டங்கள் ,PK ,த்ரீ  இடியட்ஸ் , போன்ற  மக்கள்  மனதிற்க்கு நெருக்கமான  அதே  நேரத்தில்  கருத்தையும்  சொல்லும்  வெற்றி படங்களை  கொடுக்கிறார் அமீர் கான் . ஆனால்  கமல ஹாசன் தன்னுடைய  புத்திசாலி  தனம்  காட்சிக்கு காட்சி  தெரிய  வேண்டும்  என்றே படம்  எடுப்பது  போல்  தோன்றுகிறது . உத்தம  வில்லன் , மன்மதன்  அம்பு, விஸ்வருபம் எல்லாம்  அந்த  கேஸ்  தான் .மக்களின்  மனதுக்கு  நெருக்கமான படங்களை கொடுத்து  வருடங்கள்  ஆகி  விட்டது.

என்னுடைய 150 ரூபாயை   கொடுத்து கமல்ஹாசன் ஒரு   அறிவாளி  என்பதை நான்  அறிய  வேண்டும் என்ற அவசியம் இல்லை ..
இதில்  பிக் பாஸ் , அரசியல்  மோதல்  என்று  தனது retirement  நோக்கி  வேகமாக போய் கொண்டிருக்கிறார் .
மீண்டு  வாருங்கள் உலக  நாயகரே 


உங்களுக்கு ஹீரோக்கள் தேவை இல்லை

 தமிழ் சினிமாவுக்கு மற்றும்  தமிழ்,  ஊடகங்களுக்கு   தான் ஹீரோ கள்  தேவை  , உங்கள்  வாழ்க்கைக்கு அல்ல ...
 வாழ்க்கை ஒன்றும்  தமிழ்  சினிமா  அல்ல , ஒற்றை  தலைவன்  வருவான்  ஒட்டு  மொத்தமாக  மாற்றுவான் என்று  இருந்தால்  ஒவ்வரு  முறையும்  ஏமாற்றமே  மிஞ்சும் ..

போன  மாதம்  முழுவதும் ரஜினி யை  வைத்து  ஜல்லியடித்த  ஊடகங்கள்  இந்த  மாதம்  கமலை  வைத்து  ஜல்லியடிக்கின்றனர் .
.
50 வருடம்  தாங்கள்  சார்ந்து  இருந்து  துறையில் .
10 கோடி  ரூபாய் ,  படத்தில்  5 கோடி  ரூபாய்  தனி  மனிதரின்  சம்பளம் என்று வாங்கியவர்கள் , முதல் நாள் திரைபட வெளியீட்டில்  60 ரூபாய் டிக்கட்டை 300 ரூபாய்க்கு  விற்று சம்பளம்  ஈட்டியவர்கள் ,  தன்னுடைய  படத்தை ஆர்வமாக   பார்க்க வரும்  ரசிகனின் தலையில்   10 ரூபாய்  பாப் கானை  150 ரூபாய்க்கு திரையரங்கம்  கட்டுவதை  கண்டுகொள்ளாமல் இருந்த  நல்லவர்கள் உங்களை ஊழலின்  பிடியில் இருந்து  காப்பாற்றுவார்கள் என்று  நம்பினால் உங்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் .

உண்மையான  ஹீரோ  நீங்களோ  அல்லது  உங்களுக்காக  உள்ளூரில்  உழைக்கவும் /போராடவும்  தயாராக  இருப்பவர் தான் , AC  அறையில்  அமர்ந்து twitter பதிவு  ஈடுபவர்கள்  அல்ல .


புதன், 19 ஜூலை, 2017

உங்கள் வீட்டை சுத்த படுத்துங்கள் உலக நாயகரே

ஜனநாயாக  நாட்டில்  அனைவருக்கும்  அரசியலுக்கு வர  உரிமை  உள்ளது . அதே போல்  விமர்சிக்கும்  உரிமை  அனைவருக்கும்  உள்ளது, அதே நேரத்தில்  ஒரு  குற்றம் சுமத்தினால்  அதை  நிரூபிக்கும்  கடமையும்  உள்ளது ..

 இன்று  உலக  நாயகன் எனப்படும்  கமலஹாசன்  குற்றம்  சுமத்தியுள்ளார் .. அதை  நிரூபிக்க  கவர்னரிடமோ  அல்லது  மத்திய  அரசிடமோ  லஞ்ச  ஊழல்  துறையிடமோ  தகுந்த  ஆதாரங்களை  வழங்க வேண்டும் ..

இன்று  உங்களை  ஆளாக்கிய  திரைத்துறை குற்றுயிரும்  குலையுருமாக உள்ளது ..GST வரி  விதிப்பு மட்டும்  காரணம் அல்ல , மிக  அதிகமான  நடிகர்  சம்பளம் , அதிகரிக்கும் தியேட்டர்  கட்டணம் , பார்க்கிங் , தின்பண்டங்கள்  விலை , வெளி  வர முடியாத  திரைப்படங்கள்  என பல ..உங்களை வளர்த்து  ஆளாக்கிய வீடு  குப்பை  மேடாக  உள்ளது ..ஊரை  சுத்த படுத்த  கிளம்பிய  நீங்கள் உங்கள்  வீட்டை  சுத்த படுத்தி வீட்டீர்களா .
இன்னும்  சொல்ல  போனால்  உங்களின் BIG boss நிகழ்ச்சியால் கூட சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமை காட்சிகள் வசூல் குறைகிறது  என்ற  குற்றச்சாட்டு உள்ளது ..அதை நிறுத்த  முடியுமா என்று  பாருங்கள்
8 கோடி தமிழர்களை  சந்திக்கும் முன் 8 நடிகர்களின் சம்பளத்தை குறைத்து தமிழ்  சினிமாவை வாழ வைக்க முடியுமா  என்று பாருங்கள் ..

அரசியல்  எல்லாருக்குமானது ..உழைப்பும் ,தகுதியிம் இருந்தால்  நீங்களும்  ஜெயிக்கலாம் ..ஆனால்  வீடு  தேடி  வந்து முடி சூடுவார்கள் என்று நினைக்காதீர்கள் ..தமிழக மக்கள் வெள்ளி  திரையில் தலைவர்கள் தேடலை நிறுத்தி விட்டார்கள்

உங்கள் வீட்டை  சுத்த படுத்துங்கள் உலக நாயகரே

புதன், 5 ஜூலை, 2017

ஆரம்ப கல்வி அட்ராசிட்டிஸ் ...ஒரு நகைச்சுவை பார்வை

நான்  படிக்கும்  காலத்தில்  பெற்றோர்கள்  பள்ளிக்கு  வந்து  ஆசிரியர்களை  சந்திப்பது  ஒரு  அரிதான  நிகழ்வு. யாருடைய  பெற்றோராவது  வந்து  ஆசிரியரை  சந்தித்தால்  அந்த  மாணவன் , சரியாக  படிக்காத  காரணத்திற்காகவும், ஒழுக்க சீர்கேடுகள் தான் காரணமாக  இருக்கும். பெற்றோரை   பள்ளிக்கு வரவழைப்பதை  ஒவ்வரு  மாணவரும்  பெரிய  அவமானமாக  கருதினோம். பெற்றோருக்கு  வருடம்  ஒரு  முறை  சீருடை , புத்தகங்கள்  வாங்கி தருவதை  தவிர  கல்வி   சம்பந்தமான  வேலைகள்  கிடையாது. ரேங்க்  சீட் மட்டும்  தான்  ஆசிரியருக்கும், பெற்றோருக்கும்  உள்ள  ஒரே தகவல் தொடர்பு  மற்றும்  மாணவரின்  கல்வி முன்னேற்றத்தை  கண்காணிக்கும்  வழி.

   ஆனால்  இப்போது அதுவும்  ஆரம்ப  பள்ளிகள் (ஐந்தாம் வகுப்பு வரை) அடிக்கிற  லூட்டி  தாங்க  முடியவில்லை.

    எந்த அளவு  பள்ளி  மாணவர்களது  பெற்றோர்களை  பிஸியாக வைத்து கொண்டு  உள்ளதோ  அந்த  அளவு  நல்ல  பள்ளியாக  கருத  படுகிறது.  நமது அரசு  பள்ளிகள்  வழுக்கி  விழும்  ஏரியாவும்  அதுதான் .

  Induction  Day , Fathers  Day,Mothers Day , Grand  Parents  Day ,  Cousins   Day ,Graduation  day , SPORTS  day  , school  annual  day  ன்னு  பல   தடவை , அது  இல்லாமல்   டேர்ம் சீட்  (Rank சீட்) தருகிறோம் னு நாலு   தடவை  பள்ளிக்கு கூப்பிட்டு  விடுகிறார்கள். அது  இல்லாமல்  சில  சமயம்  சிறப்பு  விருந்தினர்  கல்வி  பத்தி  lecture  தற்றார்னு  கூப்பிடுகிறார்கள்.

எனது அப்பா   வாழ்நாள்முழுவதும்  எனக்காக   பள்ளிக்கு  வந்ததை  நான்  புள்ளைங்க  play  ஸ்கூல் படிக்கும்போதே  தாண்டி விட்டேன் . இப்போது  சனிக்கிழமை பொழுது  போக்கே ஸ்கூலுக்கு  போறது  என்றாகி  விடுகிறது.

 அதை  விட  அதிகமாக activities , Project  work , cultural participation  னு சொல்லி  வாரம்  மூணு  நாள்  ஸ்டேஷனரி  கடை  கடையா  அலைய  விட்டு  விடுகிறார்கள் .சில பெற்றோர்  சம்பளம்  வாங்கற  நிறுவனத்தை  விட  அதிகமா புள்ளைங்க ஸ்கூலுக்குத்தான்  வேலை  பாக்ராங்க

ஸ்கூள் டைரி , ஸ்கூல்  app , ஸ்கூல்  வாட்ஸப்  குரூப் , Tuition வாட்சப் , ஸ்கூல்  பஸ்  டிரெக்கிங்,னு  சொல்லி  நம்பள அலெர்ட்  ஆறுமுகமாவே   வச்சிருக்காங்க .

ஒழுங்கா  இது  எல்லாத்திலும்  ஆக்ட்டிவா  இருந்தா  நல்ல  பெற்றோர் இல்லாவிட்டால்  நீங்க  புள்ளைங்க  மேல  அக்கறை   இல்லாதவர் ன்னு  சொல்லி  விடுவார்கள் .

ஒரு  புள்ளைக்கே  அலைய  முடியவில்லைனு  ரெண்டாவது  வேணுமான்னு   யோசிக்க வைத்து மக்கள்  தொகை  பெருக்கத்தை  கன்ட்ரோல் செய்ததில்  இந்த  பள்ளிகளுக்கு  பெரும்  பங்கு  உள்ளது


ரொம்ப  எழுதி  விட்டேன் .அதுக்குள்ள  எதாவது  புள்ளைக்கு   ஆக்ட்டிவிட்டி  ஏதாவுது குடுத்து  இருக்காங்களா ன்னு செக்  பண்ணனும்  பை ....


வியாழன், 29 ஜூன், 2017

பாகுபலி கட்டப்பாவும் O பன்னீர்செல்வமும் ...


         ஜெயலலிதாவுக்கு சசிகலாவுடன்  சில  சமயம் கருத்து  வேறுபாடு  வந்தது , பன்னீர்செல்வதுடன்   ஜெயலலிதாவுக்கு  கருத்து  வேறுபாடு  வந்தது  இல்லை  என்று  கூறுபவர்களுக்கு,      ஜெயலலிதா சசிகலாவின்  கருத்தை  கேட்பவராக  இருந்தார்  அதனால்  அவரோடு  கருத்து  வேறுபாடு  வந்தது.  பன்னீர்செல்வம்  கருத்து  சொல்லும்  நிலையில்  எங்கு  இருந்தார்?
   
அமரேந்திர பாகுபலி சிவகாமியுடன்  கருத்து வேறுபாடு வந்தது , ஆனால்  கடைசி  வரை  சிவகாமி தேவிகாக  உயிரை  விடுபவராகத்தான்  இருந்தார் அது போன்றுதான்   சசிகலா.

     கடடப்பா   தனது  விசுவாசத்தை  மாற்றமால்  கடைசி  வரை  இருந்தார்.. ஆனால்  இந்த  கட்டப்பா  தனது  பதவிக்கு  ஆபத்து  வந்தவுடன்  தனது  விசுவாசத்தை  டெல்லி  சுல்தானுக்கு  மாற்றி விட்டார்.விசுவாசம்  என்றால் உண்மையில் தனது  எஜமானரின்  உயிருக்கு  ஆபத்து  என்றவுடன்  தனது பதவியை  தூக்கி  எறிந்து  விட்டு  கேள்விகேட்டு  இருக்க  வேண்டும்  ஆனால்  தனது  பதவிக்கு  ஆபத்து  வரும்  வரை  அமைதி  காத்தவர்தான்  நமது  கட்டப்பா..

  டெல்லி  சுல்தான்  ஏன்  சசிகலாவை  விரும்பவில்லை, சசிகலா  எந்த  கணத்திலும்    தனது  புத்தி  கூர்மையால்,  பிடியில்  இருந்து  விலகி  தன்னை  நிறுவி கொண்டு விடுவார்  என்ற  பயம்  இருந்தது,ஆனால் கேள்வி  கேட்க  முடியாத , பதவியை  காப்பாற்றி  கொள்ள துடிக்கும்  அடிமை  தான்  சிறந்தவர்  என தான்  டெல்லி   நினைத்து விரும்புகிறது ..


செவ்வாய், 20 ஜூன், 2017

தமிழ் சினிமா பிரிந்தவர் இணையும் பாடல்கள் -ஒரு துளி

பிரிந்தவர் கூடினால் கண்ணீர்  தான்  அங்கு மொழி  என்று சொல்வது உண்டு ..

தமிழ்  சினிமா  ஆரம்ப காலத்தில்  இருந்தே பிரிந்தவர் சேரும்  காட்சிகள்  நிறைய  உண்டு . அதுவும்  பாடலால்  இணையும்  காட்சி கள்  பல,  இது  போன்ற   காட்சிகளில் நடிப்பை  விட , பாடல்வரிகள் மற்றும்  பாடலின் பின்னணி இசைதான் காண்பவருக்கு  ஆனந்த கண்ணீரை  வரவழைக்கும் சக்தி  உடையது .


எனக்கு  மிகவும்  பிடித்த   அத்தகைய பாடல்களில்   ஒன்று ,
நாளை  நமதே  படத்தில்  வரும்  அன்பு  மலர்களே, நாளை  நமதே தாய்  வழி  வந்த  தங்கங்கள்  எல்லாம் ஓர் வழி  நின்று  நேர் வழி  சென்றால்  நாளை  நமதே பாடல் ,
தம்பி  பிரிந்து போன  சகோதரர்களை  பாடலை  பாடி  கண்டுபிடிப்பார், SPB  தம்பி  வேடத்தில்  நடித்தவருக்கும் , TMS  புரட்சி  தலைவருக்கும்  பின்னணி கொடுத்து  இருப்பார்கள்.

வருட  கணக்கில் பிரிந்த   சகோதரர்கள்  சேர்ந்தால்   முதலில் நலம் விசாரித்து கொள்வார்களா இல்லை  பாடலை  முழுதாக  பாடி முடிப்பார்களா என்ற  கேள்வி  எழாமல்  உங்களை  மயங்க  வைப்பதுதான்   திரைப்படத்தின்  மேஜிக் ...

90 களில்   சூப்பர்  குட்  பிலிம்ஸ்  காலத்தில்  இத்தகைய  காட்சிகளும்  பாடல்களும்  அதிகம்.



உதாரணமாக
நான் பேச  நினைப்பதெல்லாம்  படத்தில் ஆனந்த் பாபு  , மோகினி  இணையும்  ஏலேலம்  கிளியே  பாடல்....
(இதிலும்  ஜேசுதாஸ்   குரலில் முதலில் பாடிய  பாடலை  இறுதி  காட்சியில்  மனோ  பாடி இருப்பார் , யாரும்  அதை  பொருட் படுத்தவில்லை..)

துள்ளாத   மனமும்  துள்ளும்  படத்தில்  விஜய் , சிம்ரன்  இணையும் இன்னிசை பாடி  வரும்  பாடல் .

புது வசந்தம்  படத்தில்  வரும் சித்தாரா  நண்பர்களுடன்  இணையும்  பாட்டு  ஒண்ணு  நான்  பாடட்டுமா பாடல்  இப்படி  பல ...


கடைசியாக ...மாய  நதியிலே  பாடல்  கபாலியில் ...அதுவும் பல  வருடங்கள் பிரிந்து  இணைந்தவர்கள்  சேர்ந்த பிறகு  வரும்  ஒரு  நல்ல பாடல்..

இப்போது  எல்லாம்  செல்போன் , இணையம் ,Facebook, வாட்ஸப்  காலம்  ஆகி  விட்டதால்  இது  போன்ற  பாடலுடன்  இணையும்  காட்சிகள்  குறைந்து  விட்டது  தமிழ்  சினிமாவில் ..

ஆனாலும் பிரிந்தவர்கள்  இணையும் இசையோடு  வரும்  ஆனந்த  கண்ணீர்  பாடல்களை  நாம்  கொஞ்சம்  தொலைத்து  விட்டோம்  என்றே தோன்றுகிறது.


(பிகு ):- இத்தைகைய  பாடல்கள்  சிலவற்றை  நீங்கள்  பின்னுட்டத்தில் (கமெண்ட்ஸ்) பகிர்ந்தால் மகிழ்ச்சி .





வியாழன், 8 ஜூன், 2017

கவிஞர் வாலி ரசித்ததில் ஒரு துளி


தசாவதாரம்  கல்லை  மட்டும்  கண்டால்  பாடல்  எனக்கு  மிகவும்  பிடித்த  பாடல்களில்  ஒன்று..

கமலஹாசனின்  உண்மையான  தாயார்  பெயர்  ராஜலக்ஷ்மி ,தந்தை  பெயர்  ஸ்ரீனிவாசன் ...

சைவ  சோழ அரசனுக்கு எதிராக விஷ்ணு  புகழ்  பாடும்  இந்த  பாடலில்,

 ராஜலக்ஷ்மி  நாதன்  ஸ்ரீனிவாசன் தான் , ஸ்ரீனிவாசன்  சேய் இந்த   விஷ்ணுதாசன் தான்  (கமலின்  கதாபாத்திர  பெயர்)

என்று  வாலி  எழுதியது  பௌண்டரி  என்றால் ,,,


நாட்டிலுண்டு  ஆயிரம்  ராஜ  ராஜர்தான் , ராஜனுக்கு எல்லாம்  ராஜன்  இந்த  ரங்க ராஜன் தான்    (வாலியின்  இயற் பெயர் ரங்கராஜன் )

என்றுஅடுத்த  வரியில்  வாலி  எழுதியது  சிக்ஸர் ...

காட்சிக்கு  பொருத்தமான பாடலில்  , கமல் ,மற்றும்  தன்னையும் பொருந்தியது வாலியின்   அபார கற்பனை.. 

புதன், 17 மே, 2017

இறப்பு தேதி , கடவுளின் அப்டேட்

 கடவுளின் நண்பர் : மனிதர்கள்   ரொம்ப  அதிகம் ஆட்டம்  போட  ஆரம்பித்து  விட்டனர் . சாவே  இல்லை  என்பது  போல் வாழ்ந்து  தங்களது  தேவைக்கு  அதிகமாக   சொத்து குவித்து  வருகிறார்கள், இதனை  சரி  செய்ய  வேண்டும், கடவுளே ?

கடவுள் :-  என்ன  செய்யலாம் ?

நண்பர் :_  எல்லா  மனிதர்களையும்   (expiry  date ) இறக்கும்  தேதியை தலையில் தெரிவது  போல்  எழுதி  update செய்து   விடலாம் . அதற்கு  பிறகு  மனிதர்கள்  ஓரளவு  கட்டுப்பாடுடன்  நடந்து  கொள்வார்கள் .

கடவுள்  அப்படியே  ஆகட்டும்  அப்டேட்  செய்தார்.

அன்று  முதல்  அணைத்து  மனிதர்கள் தலையிலும் (expiry date) இறப்பு தேதி  தெரிய  ஆரம்பித்தது .

ஆனால்  நடந்தது வேறு ...

குறைந்த  ஆயுள்  மனிதர்கள்  உழைக்க  மறுத்தனர் . இருக்கும்  வரை  சந்தோசமாக  வாழ  வேண்டும்  என நினைக்க  ஆரம்பித்தனர். நிறுவனங்களும்  ,குறைந்த  ஆயுள்  உள்ளவருக்கு  வேலை  தர  மறுத்தது . நீ  பாதில  போய்டா  ரிப்ளஸ்ட்மென்ட் கிடைக்காது  என்று.

பெற்றவர்கள்  குறைந்த  ஆயுள்  கொண்ட  குழந்தைகளை வளர்க்காமல் அனாதை  இல்லத்தில்  தர  ஆரம்பித்தனர்.                    குறைந்த  ஆயுள்  கொண்ட  பெற்றோர்  நீண்ட  ஆயுள்  உள்ள  பிள்ளையை  தங்களுக்கு  பிறகு யார்  பார்த்து கொள்வார்கள்  என்று  யோசிக்க  ஆரம்பித்தனர்..

திருமண விளம்பரங்கள்   60 வயசு  வரை  வாழும்  பெண்ணுக்கு  60 வயசு  வரை  வாழ கூடிய  மணமகன்  தேவை  என்று வர  ஆரம்பித்தது  . இறப்பு  தேதி  பொருத்தம்  தான்  முதல் பொருத்தமாக  பார்க்க  ஆரம்பித்தனர். காதலிப்பவர்களும்  இறப்பு  தேதி   பார்த்து  காதலிக்க  ஆரம்பித்தனர்.

உயிர்  காக்கும்  மருத்துவம்  என்று  ஒன்று  இல்லாமல்  போய் விட்டது .. எப்டியா  இருந்தாலும் நான் உயிரோடு  இருக்க  போறேன் . கை , கால் , உடம்பு  நல்லா  வச்சிருந்தா  போதும்  என்று அதை  மட்டும்  சரி  செஞ்சுடுங்க  என்று  டாக்டர்களை  மெக்கானிக்  ஆக  மாற்றினார்கள் .

நிறைய  பேர் எங்கள்  மதத்தில்  தான்  அதிக ஆயுள் கொண்ட  குழந்தைகள்  கிடைக்கிறது  எனவே இங்கு  வந்து  விடுங்கள் என்று கூற ஆரம்பித்தனர். நிறைய  சாமியார்கள்  இறப்பு தேதியை  மாற்றும் வல்லமை எங்களுக்கு  இருக்கிறது என்று  புருடா  விட்டு கல்லா  கட்ட  ஆரம்பித்தனர் .

இறப்பு  தேதி  நெருங்க  நெருங்க  மனிதர்கள்  எல்லோரையும் மகிழ்ச்சியாக  வைத்திருந்து மனிதர்கள்  இறப்பார்கள்  என்ற  கடவுளின்  எதிர்பார்ப்புக்கு   மாறாக மனிதர்கள் நீண்ட  ஆயுளை  உடைய தனது   குடும்பத்தாராக இருந்தாலும்  நண்பராக  இருந்தாலும்    பொறாமை  அடைந்து , வெறுப்பையும், கோபத்தையுமே  உமிழ  ஆரம்பித்தனர்.

நீண்ட ஆயுள் உள்ளவர்களுக்கோ , தங்களது உற்ற  நண்பர்கள் ,உறவினர்கள் ,குடும்பத்தினர் குறைந்த  ஆயுளுடன்  இருப்பதை  காணும் போது குற்ற  உணர்ச்சியில் புழுங்க  ஆரம்பித்தனர் ..

குறைந்த  ஆயுள்  கொண்ட  மனிதர்கள் கொண்ட குழுக்கள் அமைக்க  ஆரம்பித்து , நமக்கு  இல்லாத  உலகம் வேறு  யாருக்கும் இருக்க கூடாது என்று  நாச  வேலைகளில்  ஈடுபட  ஆரம்பித்தனர்

மொத்தத்தில்  நிலைமை இன்னும்  மோசமானது

ஒரு  சின்ன  நம்பர்  அப்டேட்  இவ்ளோ பிரச்சனை  ஆயிடுச்சே என்று கடவுள் பழைய   இறப்பு  தேதி  இல்லாத  வெர்ஸனை  தொடர  ஆரம்பித்தார் .

சாகுற  நாள்  தெரிஞ்சா வாழற  நாள்  சந்தோசமாக இருக்காது  என்ற ரஜினி பட  வசனம் போல் . நமக்கு  சாகுற   நாள்  தெரியாது ஆனால் வாழும் வரை நாமும் மகிழ்ச்சியாக இருந்து மற்றவரையும் மகிழ்ச்சியாக வைத்து  இருப்போம் ..


(concept  inspired by the   story  some where  I  read )














வெள்ளி, 5 மே, 2017

மோடிஜி தந்த அதிர்ச்சி ? - நகைச்சுவை கற்பனை

காலையில் எழுந்து பார்த்தால், எப்போதும்  வெளியில்  கிடக்கும்  பால் , மற்றும்  பேப்பர்ஐ  காணவில்லை ... பால்  மற்றும்  பேப்பர் போடுபவர்  வேலைக்கு  வரவில்லை .... சரி  நடந்து  போய் பால்  கடைக்கு  போனால்    பால்  விலை  நாளை  முதல்  லிட்டர் 500 ரூபாய்  என்று  அறிவிப்பு  வைத்து இருந்தார்கள் .

வீட்டுக்கு  திருப்பினால்  அபார்ட்மெண்ட்  வாசலில்  இருந்த  செக்யூரிட்டி யை  காணவில்லை . வீட்டில்  மனைவி  வீடு துடைக்க வரும்  அம்மா நாளை  வேலைக்கு  வர மாட்டார்களாம் அப்டியே  வரணும்னா  மாதம் 8000 ரூபாய்  வேண்டும்  என்று  கூறியதாக சொன்னாள் .

சரி  காரை  எடுத்து  ஆபீஸ் செல்வதற்கு  பெட்ரோல்  போட்டால்  லிட்டர் 750 ரூபாய்  என்று  10 லிட்டர்க்கு  7500 ரூபாய்  வாங்கினார்கள் .
காலையில் வீட்டில்  காபி   சாப்பிட்டவில்லை என்று  ஆபீஸ் கேன்டீனில்  காபி ஆர்டர் செய்தால்  500 ரூபாய்  பில் வந்தது .
வீட்டு  உரிமையாளர்  இந்த  மாதம்  முதல் வீட்டு  வாடகை 70,000 ரூபாய்  என்று  அதிர்ச்சி  அளித்தார் .

என்னடா  காலைலேந்து  அதிர்ச்சி  மேல் அதிர்ச்சியாக இருக்கிறதுன்னு   இணையதளத்தில் செய்திகளை   பாத்தா ..

நேற்றிரவு  வெளிநாட்டில்  உள்ள  கருப்பு  பணம்  முழுவதும் மீட்கப்பட்டு ஒவ்வரு இந்தியரின்  வங்கி  கணக்கிலும் 15 லட்சம் நமது இந்திய  பிரதமரால்  டெபாசிட் செய்யபட்டுள்ளது

என்று  தலைப்பு  செய்தி  வந்து  இருந்தது ....என்னடா  நமக்கு  வரலையேன்னு  பாத்தா
"  ஏற்கனவே  வருமான  வரி  செலுத்துபவர்களுக்கு  15 லட்சம்  கிடையாது  என்று  பெட்டி  செய்தி

என்ன  கொடுமை  இது ?  என்று  கத்திய  என்னை  பார்த்து மனைவி "  எப்ப  பாத்தாலும்  நியூஸ்  சேனல்  பாத்துட்டு , நடுராத்திரி  எதாவுது கனவு  கண்டு  கத்த  வேண்டியது " என்று  சொன்னாள் .

நல்லவேளை  கனவு  தானா  என்று  சந்தோச  பட்டேன் ....

புழக்கத்தில்  திடீரென  சில லட்சம்  கோடிகள்   வந்தால்,  விலைவாசி  எப்படி  உயரும் , திடீரென  இலவசமாக  கிடைக்கும்  பணம் மக்களை   எந்த  அளவு  சோம்பேறியாக்கும் ...இது  தெரியாம  வாக்குறுதி  அளிப்பவர்களையும் ,அதை  நம்பி வாக்களிப்பவர்களையும் என்ன  செய்வது?



புதன், 3 மே, 2017

தெர்மக்கோல் அமைச்சரும், பணமதிப்பிழப்பு பிரதமரும்


சென்ற வாரத்தில் 60 ஏக்கர்  பரப்பளவில்  தண்ணீர்  தேங்கி  இருக்கும் வைகை அணையில் தண்ணீர்  நீராவி  ஆவதை  தடுக்க  தெர்மோகோல் அட்டையை  விட்டார்   தமிழக  அமைச்சர்  , அந்த  முயற்சி படு தோல்வி அடைந்ததால்   இது  மிக பெரிய  முட்டாள்தனம்  என்று  ஊடகங்களிலும் ,சமூக வலை  தளங்களிலும்  கழுவி ,கழுவி  ஊற்றப்பட்டார்.

இதை விட  பெரிய  முட்டாள்தனம்  ,
கடந்த  நவம்பரில்  நடந்த பணமதிப்பு இழப்பு  நடவடிக்கை ,
ஏறத்தாழ 85%  பணத்தை  ஒரே  அறிவிப்பின் மூலம்  மதிப்பிழக்க செய்தார்கள்.  3 லட்சம்  கோடி  கருப்பு  பணம் ஒழிந்து விடும் , கள்ள நோட்டு  ஒழிந்து  விடும் , ஜனவரிக்கு பிறகு  புதிய  இந்தியா பிறக்கும் என்ற நம்பிக்கையை  ஏற்படுத்தி கோடிக்கணக்கான  மக்களை  ATM  வாசலில்  நிறுத்தினர் .. ஆணால்  98%  பணம்  டிசம்பர்  இறுதியில் வங்கிக்கு  திரும்ப வந்து  விட்டது .கள்ள  நோட்டை  பற்றி பேச்சே  காணோம் . ..ஒரு  மாற்றமும்  இல்லை வரவில்லை   ,இப்போது டிஜிட்டல் இந்தியா  என்று ஜல்லியடிக்கிறார்கள் .

தெர்மோகோல் திட்டத்தை விட  இது  மிக பெரிய முட்டாள்தனமாக முடிவடைந்து விட்டது .
தெர்மோகோல் திட்டத்தில்  இழப்பு 10 ஆயிரமோ  அல்லது  10 லட்சமோ தான் , பணமதிப்பு இழப்பினால்  100க்கும் மேற்பட்ட உயிர்  சேதம் , வேலை  இழப்பு , ஆயிரக்கணக்கான கோடிகளில் பொருளாதார இழப்பு .

 தெர்மோகோல் அமைச்சராவுது  திட்டம்  தோல்வி  அடைந்தது  என்பதை  கவுரவமாக ஒப்பு கொண்டு விட்டார் . பிரதமரோ , நிதி  அமைச்சரோ  ஒப்பு கொள்ள கூடவில்லை .தெர்மோகோல்  அமைச்சரிடம்  காட்டிய   வீரத்தை  ஊடகங்கள்  யாரும் அவர்களிடம் காட்ட  முடியவில்லை.


வியாழன், 20 ஏப்ரல், 2017

வலுக்கும் வலது சாரி சிந்தனை .

 பொதுவான  சமுதாயம் , அது வளமோ, செல்வமோ இருப்பதை  பகிர்ந்து  கொள்வது . உலகின்  வளம்  அனைவருக்கும் பொதுவானது இதில்  நீங்கள்  உங்கள்  அறிவாற்றலால்  அல்லது  பலத்தால்  நீங்கள் அதிகம்  பெற்றால்  அதை பலவீனமானவருடன்  பகிர வேண்டும்  இது  இடதுசாரி  சிந்தனை.

வலது  சாரி  சிந்தனை  என்பது  ஒரு  குறிப்பிட வட்டம் அது  மதமோ, தேசமோ , மாநிலமோ ,நான் உயர  வேண்டும்  என்று  எண்ணுவது . அதற்கு  இது  எனக்கு  சொந்தமானது , எனது   அறிவினாலோ , உழைப்பினாலோ , அல்லது  பரம்பரையினாலோ வந்தது  இதை  நான்  ஏன்  மற்றவரிடம் பகிரவேண்டும் என்ற  சிந்தனை

எப்போதும்  சாதாரண  மனிதன்    இடதும்  இல்லை  வலதும்  இல்லை  நடுவில் இருப்பவன் . தனது  மற்றும்  குடும்பத்தின்  தேவைகள்  நிறைவேற  வேண்டும் , அதே நேரத்தில்  பக்கத்து  மனிதன் கஷ்டப்பட்டால்  உதவ  வேண்டும்  என்றும்  நினைப்பவன் .

கடந்த  சில  ஆண்டுகளில்  வலதுசாரி  சிந்தனைகள் உலகம்  எங்கும்  வலுபெறுகிறது .
இடது  சாரி மற்றும்  நடு நிலைமையாளர்கள் உலகெங்கும்  தோற்கடிக்க  படுகிறார்கள்.
ஒரு  சாதாரண  நாடு நிலை மனிதனை  உனது  வேலை  அவர்களால்  பறி போய்  விடும் , உனது நாட்டு  செல்வங்களை  அவர்கள் அனுபவிக்கிறார்கள் . அவனால்  உனது  குடும்பத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கபட்டுள்ளது   என்று  பயமுறுத்தபடும்  நடு நிலைமை  உடையவன்  வலது சாரி  சிந்தனையை நோக்கி  செலுத்த படுகிறான்.

இதை  டொனால்டு  டிரம்ப் அமெரிக்காவில்  செய்தார் . பிரெக்ஸிட் க்கும்  இதுவே  காரணம் .. மோடி, RSS  இதையே இந்து  தேசிய  வாதமாக கட்டமைத்து வெற்றி  பெறுகிறார்கள் . இதையே  சீமான் ,  போன்றோர் தமிழ்  தேசியம்  என்ற  அளவில்  கட்டமைக்க முயலுகின்றனர்.

இந்தியாவில்   இடதுசாரி  இயக்கங்கள் போராட்டம்  செய்து  வேலை  வாய்ப்பு இல்லாமல்  செய்து  விடுவார்கள்  என்று ஒரு  தோற்றம்  உருவாகி  விட்டது , அதனால் இளைஞர்களை  ஈர்க்க  முடியவில்லை  .இந்தியாவில், நடு  நிலைமை  இயக்கமான  காங்கிரஸ் , மாநில  கட்சிகள் சிந்தனை ரீதியாக  எதிர்க்க  முடியாமல்  தங்களின்  மேல்   சுமத்தப்பட்ட   ஊழல்  குற்றச்சாட்டுகளுடன்  போராடி  வருகின்றன.

ஒவொரு  சிந்தனையும்  ஒரு  உச்சத்தை  அடையும் , அதனால்  பயன்  அடையும் என நினைத்து  தலையில்  தூக்கி  வைத்து  ஆடும்  சாதாரணன்  பயன்  இல்லை  என  உணரும்  போது  தூக்கி  எறிந்து  விடுவான்.

( பி.கு) நான்   ஒன்றும்  பெரிய அப்பாடக்கர்   இல்ல , திடீர்ன்னு  படிச்சத  ,நினைச்சத  நம்ம  நண்பர்களிடம்  பகிரநினைத்தேன் .. தவறுகள் இருப்பின்  மன்னிக்கவும்










செவ்வாய், 18 ஏப்ரல், 2017

OPS Vs TTV Vs எடப்பாடி

தமிழகத்தின்  மக்கள் தொகை  பெருக்கத்தின்   (Fertility rate)அளவு ஒரு   பெண்ணிற்கு 1.6 . தென் மாநிலங்கள் அனைத்தும்  ஏறக்குறைய  இதே அளவுதான் .  மத்திய   இந்தி  மாநிலங்களின்  இன பெருக்கத்தின்  அளவு  ஒரு பெண்ணிற்கு  2.8.

 தமிழகத்தின்  கல்வியறிவு அளவு ஏறக்குறைய  85%, இதே  மத்திய இந்தி  பேசும்  மாநிலங்களின்  அளவு  ஏறக்குறைய 65% மட்டுமே.
உயர்கல்வி  அடைபவர்கள்  தமிழகத்தில் கிட்டத்தட்ட  43% , மத்திய  இந்தி  பேசும்  மாநிலங்களில்  இது  கிட்டத்தட்ட  27% சதவீதம்  மட்டுமே.

இதன்  காரணமாகத்தான்  பெரும்பாலும்  தமிழகத்தில்  உடல்  உழைப்பு  தொழிலாளர்கள்  எண்ணிக்கை  குறைகிறது, படித்த  தமிழ் இழைஞர்கள்  மாநிலத்தைவிட்டோ , தேசத்தை  விட்டோ  கடந்து  பணி  புரியும் சூழ்நிலையும்  ஏற்படுகிறது.
மேலும்  படிக்காத  உடல்  உழைப்பு  பிற  மாநில தொழிலாளர்கள் தமிழகம்  நோக்கி  வர காரணம் .


மிக  அதிகமான  உயர்  கல்வியை  தந்த  நாம் , அந்த அளவு  வேலை வாய்ப்பை  உருவாக்க     முடியுமா  தெரிய வில்லை ?.. மேலும்  இந்த  நிலை  நீடித்தால் அடுத்த  சில  ஆண்டுகளில்   80 களில்  இருந்தது போன்று  வேலை வாய்ப்பு இன்மை   ஏற்படும்  வாய்ப்பு   உள்ளது . அடுத்த சில  வருடங்களில்  50 லட்சத்திற்கும்  மேற்பட்ட படித்த இளைஞர்கள் வேலை  இல்லாமலோ/  தகுதிக்கு  ஏற்ற  வேலை  கிடைக்காமல் தமிழகத்தில் மட்டும்  இருப்பார்கள். ஒரு சமுதாயத்தில் நான்கு  அல்லது  மூன்று  இளைஞர்களில்  ஒருவருக்கு  வேலை  வாய்ப்பு  இல்லாமல்  இருப்பது   பற்ற வைக்க  தயாராக  வெடிகுண்டை  கையில்  வைப்பதற்கு  சமம் .   ( ராம்குமார் ,ஸ்வாதி கொலை  எல்லாம் ஒரு சில  துவக்கங்கள் தான் )

இதை  எல்லாம்  யோசித்து   எதிர்காலத்தை  நோக்கி  செயல்பட  இதுவே  தருணம் . வாய்ப்பை கோட்டை விட்டுவிட்டு  நாம் ஒபிஸ் vs  TTV  vs  எடப்பாடி  விளையாட்டு  விளையாட  கூடாது.  உதவ  வேண்டிய  மத்திய  அரசோ  பிள்ளையை  கிள்ளி  தொட்டிலை  ஆட்டி  கொண்டு  இருக்கிறது.
 யார்  ஆண்டாளும்  மக்கள்  நலத்தை  நோக்கி  சிந்தியுங்கள் .
  எதிர்காலத்தை  நோக்கி  சிந்தியுங்கள் ?


இந்த  தலைப்பு  வைத்தால் நிறைய  பேர் படிப்பார்கள்  என்பதை  தவிர  வேறு  காரணம்  இல்லை .


வியாழன், 30 மார்ச், 2017

பொது வாழ்வில் நேர்மை எவ்வாறு இருக்க வேண்டும்

பொது வாழ்வில்  நேர்மை  எவ்வாறு  இருக்க வேண்டும் ?

சாணக்கியர்  தனது  அறையில்  உட்க்கார்ந்து  படித்து மற்றும் எழுதி  கொண்டு இருந்தார்  , அப்பொது  ஒரு  விளக்கு  எரிந்து கொண்டு  இருந்தது  , சிறிது  நேரம் கழித்து  அந்த  விளக்கை  அணைத்து  விட்டு  இன்னொரு  விளக்கை  பற்ற  வைத்து  எழுத ஆரம்பித்தார்.
அதை  கவனித்த  அவர் மகள்  அப்பா , என்  நீங்கள்  அந்த  விளக்கை  அணைத்து  விட்டு  மற்றொரு   விளக்கை பற்ற  வைத்து கொண்டு எழுதுகிறீர்கள்  என்று  கேட்டாள்.

அதற்கு  சாணக்கியர் , முதலில்  நான் அரசாங்க  பணி   செய்து  கொண்டு  இருந்தேன் , அதனால்  அரசாங்கம்  தந்த எண்ணையில்  எரிந்த விளக்கை  பயன்படுத்தினேன், இப்போது  எனது  தனிப்பட்ட  பணியை  செய்கிறேன் , அதற்கு அரசாங்கம்  தந்த  எண்ணையில்  எரியும்  விளக்கை  பயன்படுத்துவது  தவறு , அதனால்  எனது சொந்த பணத்தில் வாங்கிய  எண்ணையில்  எரியும் விளக்கை  பயன்படுத்துகிறேன்.

  சிறிய  தவறு  தானே  என்று  நான் இன்று செய்தால்  ,  நாளை அந்த  பழக்கம்  பெரிய  தவறு  செய்யவும்  தூண்டும்  என்று கூறினார்.

பொது வாழ்க்கையில்  இருக்கும்   அனைவரும்   இந்த  சாணக்கிய  நீதியை கடை பிடித்தால் இந்த நாடு கண்டிப்பாக முன்னேறும்.

புதன், 22 மார்ச், 2017

அதிகாரம் அவர்களுடைய கையில்

அதிகாரம் அவர்களுடைய கையில் ...,

 தீர்ப்பு  மாத  கணக்கில் ஒத்தி வைக்க படுகிறது, வேண்டும்  என்றவுடன்  தரப்படுகிறது ... ஏனனில் அவர்களே நீதி மன்றம்.
 
எத்தனை சட்டமன்ற  உறுப்பினர்கள்  இருந்தாலும் , அவர்கள்  தலை அசைத்தபிறகு தான்  ஆளுநர் பதவி  பிரமாணம்  செய்து  வைப்பார். ஏனெனில்  அவர்களே  ஆளுநர்கள் .

முதலைமைச்சர்கள் தோற்கடிக்கப்பட்டாலும் , இரண்டவது  இடத்துக்கு  சென்றாலும் , வெற்றியை பண ,அதிகார பலத்தின்  மூலம் திருடலாம் . (கோவா ,மனிப்பூர் ) ஏனெனில் அவர்களே  அரசியல்  சட்டம் .

கட்சி  பெரும்பாலான  தொண்டர்கள் , நிர்வாகிகள்  ஆதரவு  , இல்லாமல் , வெறும்  காகிததில்  கணக்கு  காட்டினால் , மூன்றாவது  பெரிய  கட்சியின் சின்னம் முடக்கப்படும் . ஏனெனில்  அவர்களே  தேர்தல்  ஆணையம் .

எதிர்ப்பவர்கள் கோமாளிகளாகவும் , தேச துரோகிகளாகவும்                        சித்தரிக்க  படுவார்கள் . ஏனனில்  அவர்களே  ஊடகம் ..

ஆனால்  இந்த  தேசம் அனைத்தையும் கடந்தது வந்து உள்ளது  , ஒற்றை  பெண்மணி  தான்  இந்தியா என்று இருந்த காலத்தையும் பார்த்தது அவரின்  தோல்வியையும்  பார்த்தது .

இது  அவர்களின் காலம் , விளையாடட்டும் ,
வீசும்  காற்று மாறும் .







வெள்ளி, 10 மார்ச், 2017

வாழ்க்கையின் ஆச்சரியங்கள்.

.எனது சின்ன வயதில்தான் எத்தனை  ஆச்சரியங்கள் மற்றும் சந்தோசங்கள்.

 ஊருக்கு மேல்  எப்போதாவது பறக்கும் விமானங்கள்,
 தொட்டால் சிணுங்கி செடி,
 ஒளியும்  ஒலியும் வரும்  திடீர் புதிய பாடல்கள்,
 இரண்டாம் வகுப்பு  ரயில்பயணதில்  பின்னோக்கி ஓடும் மரங்கள்,
பிரச்சாரத்துக்கு வந்த ராஜிவ் காந்தியை அருகில் பார்த்தது ,
உலக தமிழ்மாநாட்டின் போது பார்த்த மிதவை பாலம் ,
திடீரென வரும்  கோடைமழை ,
முஸ்லீம் நண்பர்  வீட்டு திருமண  கறி   பிரியாணி .
தினமலர்  தீபாவளி மலர் ஆளுயுர  ரஜினி கமல் போஸ்டர் ,
கொள்ளிடம்  ஆற்றின் அகலம் ,
ஏப்போதாவுது பார்க்கும்  சென்னை நகரத்தின் உயரமான  கட்டிடங்கள்,
 5 தியேட்டர்கள்  ஒரே இடத்தில் இருந்த   மாரீஸ் தியேட்டர்.
ரஜினி படத்தின் முதல் நாள் டிக்கெட்,
உள்ளூரில்  நடந்தால் மட்டும்  கண்டிப்பாக ஜெயிக்கும் எங்க  ஊரு கபடி டீமின்  வெற்றி.

 ஜூன் மாதத்தில் இருகரையையும் தொட்டு கொண்டு நுரையுடன் வரும் காவிரி  தண்ணீர் ,
 எப்பதாவது  நம்மிடம் நேரடியாக  பேசும் பள்ளியின் தாவணி பெண்கள் ,
 முதல் 3 ரேங்கில்  வரும்பொழுது தரும்   ரேங்க் கார்டு,
எப்போதாவது   இருக்கை  காலியாக  வரும்  அரசு பேருந்து.
இப்படி எல்லாமே ஆச்சரியம்...

ஆனால் எனது மகனுடைய தலைமுறைக்கு ஆச்சரியங்கள்  எதுவும் மிச்சம் உள்ளதா   என்று தெரியவில்லை ?

உலக  அதிசயத்தையே நேரில் காட்டினாலும், அப்படியானு பார்த்து அடுத்த வினாடி  மொபைல் கேம் விளையாட  ஆரம்பித்து  விடுகிறார்கள்..

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

கருணாநிதி வழியில் சசிகலா , ஜெயலலிதா வழியில் ஸ்டாலின்

கடந்த 25 ஆண்டுகளாக தமிழக அரசியலின் 2 ஆளுமைகள் கலைஞர் கருணாநிதி மற்றும்  புரட்சி தலைவி  ஜெயலலிதா ..

கலைஞர் அரசியல் அதிக  ஜனநாயகமானது ,
 குடும்பத்தில்  ஒருவருக்குத்தான்  சட்ட மன்ற  தேர்தலில்  போட்டியிட  வாய்ப்பு  என்று  என்று  கலைஞர்  கூறிய போது  அப்போ   ஸ்டாலினுக்கு   போட்டிஇட  வாய்ப்பு  அளிக்க  மாட்டிர்களா என்று  கேட்க்கும்  இரண்டாம்  நிலை  தலைவர்கள்  இருந்தனர் .
எதிர்த்து  கேள்வி  கேட்பவர் களையும்   அனுசரித்து  செல்லவே  முயற்சி  செய்வார்.  தேர்தலில்  போட்டியிட  வாய்ப்பு  கொடுத்து  போட்டியிட  மறுத்தவர்களையும் கட்சியை  விட்டு  நீக்க  மாட்டார்.

அம்மா அவர்கள்  கட்சி  ராணுவ  கட்டுப்பாட்டில்  இருக்க  வேண்டும் என்பதை  விரும்புபவர்.  கட்சியில்  இருந்து  கொண்டு  எதிர்த்து  பேசுவது என்பதை  நினைத்து  பார்க்க  கூட முடியாது. அம்மா அவர்களை தவிர  இரண்டாம்  நிலை  தலைவர்கள்  யாரும்  முன்னிலை  படுத்த  பட  மாட்டார்கள் .
 கலைஞரிடம்  அரசியல்  பயின்ற ஸ்டாலின்  இப்போது  விரும்புவது  ஜெயலலிதா  பாணி  அரசியலையே , பெரும்பாலும்  அவரே  முன்னிலை  படுத்தபடுகிறார்  , தலைமையின்  முடிவை   யாரும் கேள்வி   கேட்க கூடாது . கட்சி  முழுவதும்  தனது  ராணுவ  கட்டுப்பாட்டில் இயங்க  வேண்டும்  என்று  விரும்புகிறார்.

அம்மாவிடம்  அரசியல்  பயின்ற  சசிகலா  இப்போது  கடைபிடிப்பது  கருணாநிதி  பாணி  அரசியலை . எதிர்த்து அறிக்கை  விட்ட கே பி முனுசாமி  இன்னும்  கட்சியில்  இருக்கிறார் . நாஞ்சில்  சம்பத்  கூட  சமாதான  படுத்தபட்டார் . இரண்டாம்  கட்ட  தலைவர்கள்  முன்னிலை படுத்த  படுகிறார்கள்.

இன்னொரு  விசயம் , கலைஞர்  அடிக்கடி  மாநில  உரிமை , திராவிடம் அப்டின்னு  கத்தி  சுத்துவார்.  ஸ்டாலின்  அது எதுவும் செய்வதில்லை . ஆனால்  நடராஜன்  கலைஞர்  வழியில் மாநில  உரிமை , திராவிடர்  என்று  எல்லாம்  பேசுகிறார் .


ஆக , கலைஞர்  வழியில்  சசிகலாவும் , அம்மா  வழியில்  ஸ்டாலின் நடை  போடுகிறார்கள்  

வியாழன், 12 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு தடையும் , தமிழ் பொருளாதாரமும்

ஜெயம் ரவி தனி  ஒருவன் படத்தில்  கூறுவது போல , 6 ம் பக்கத்து பொருளாதார செய்திகள்  தான்  மற்ற  பக்க செய்திகளை  தீர்மானிக்கிறது . பொருளாதாரத்தில்  சிறந்து  இருக்கும்   ஜப்பான்  போன்ற நாடு அணு  ஆயுதம்  இல்லாமலே  வலிமையான  நாடாக  இருக்கிறது.

இந்திய  நிறுவனங்களை  ஏன்  ஊக்குவிக்க  வேண்டும் ?, வெளிநாட்டு  நிறுவனங்கள்  ஒரு சந்தையாக   மட்டும்  பார்க்கும்  பொழுது , இந்திய  தொழில்  நிறுவனர்கள்  சந்தையாக  மட்டும்  பார்க்காமல்  ஒரு நாடு என்று  ஒரு  உணர்வுடன்  பார்ப்பார்கள்  என்ற  நம்பிக்கை  தான் . மேலும்  வரும்  வருமானத்தை  இந்தியாவிலேயே  முதலீடு  செய்வார்கள்  என்ற  நம்பிக்கையும்தான் . போர், இயற்கை பேரிடர்   போன்ற தருணங்களில்  சந்தை  கண்ணோட்டம்  இல்லாமல்  உதவுவார்கள்  என்ற  நம்பிக்கையும்தான் .

இதே காரணத்திற்காக  நாம்   நமது  மாநிலத்தில்  தமிழ்  நிறுவனங்களையும் , தமிழ் தொழில் அதிபர்களையும்  ஆதரிக்க  வேண்டும். உதாரணமாக  தமிழ்  திரைப்படங்களை  பார்த்து  தமிழ்  திரையுலகத்தை  உயிர்ப்பாக  வைத்து  இருப்பதால் , தமிழ்  திரை உலகம்  உரிமையோடும் , உணர்வோடும்   ஜல்லிக்கட்டு , காவேரி  நீர்  பிரச்சனை  போன்றவற்றிற்க்கு குரல்  கொடுக்கின்றனர்.
இத்தகைய  குரலை  நம் அனைவரும் இந்தி  திரைப்படத்தை மட்டும் பார்த்து  இருந்தால் ஷாருக் கானிடமோ ,சல்மான்கானிடமோ  எதிர் பார்த்து  இருக்க  முடியாது .


 உள்ளூர்  அண்ணாச்சியை அழித்து  விட்டு , பன்னாட்டு  மளிகை கடையில்  வாங்க  ஆரம்பித்தால்  என்ன ஆகும்?, அண்ணாச்சி  கடையில்  நடப்பது வெறும் வியாபாரம்  மட்டும் அல்ல  அங்கு  ஒரு  நட்பு,  உறவு, அன்பு   எல்லாமே நடக்கிறது ,  வார்தா  புயலின்  போது  கார்டு  வேலை  செய்யா  விட்டாலும்  , ATM ல் இருந்து  காசு  எடுக்க முடியாவிட்டாலும் உரிமையுடன் அடுத்த  வாரம்  தருகிறேன் என்று  பொருள்  வாங்கினோம் மற்ற  இடங்களில் முடியுமா ?

இன்னொன்று , போட்டியார்களை  வைத்து  இருக்கும்  பொழுது  மட்டுமே வாடிக்கையாளர்  சந்தையாக  இருக்கும் , போட்டியாளர்களை  ஒழித்து  விட்டு  ஒரே  ஆளிடம்  இருந்தால் சந்தையில்  அவன் சொல்வதே  விலையாக  இருக்கும்?

இதற்க்காக  தர  குறைவான  பொருளையோ /.சேவையோ   வாங்குங்கள்  என்று  சொல்லவில்லை , இரண்டு பேரிடமும்  ஓரே  தரமான சேவையோ / பொருளோ  தரும்  போது , சிறு விலை  குறைப்பை  பொருட்படுத்தாமல் உள்ளூர்  வியாபாரத்தை  ஊக்குவிக்க வேண்டும் .

உதாரணங்கள் :-
   சென்னையில்  பல  ஆண்டுகளாக  ஒரு தமிழ் நிறுவனமான பாஸ்ட் ட்ராக்  வாடகை  கார்  சேவையை வழங்கி  வருகிறது . ஆனால்  சர்வதேச  நிறுவனமான  உபேர் , ஓலா  ( பெரும் சர்வதேச  முதலீடு) போன்றவை  மிக  பெரிய  விளம்பரத்துடன் , பெரும் முதலீட்டுடன்  களம்  இறங்கியுள்ளன.   இவர்களை  போன்றவர்களை  கண்முடித்தனமாக  ஆதரித்தால்  இங்கு  உள்ள  பாஸ்ட்  ட்ராக்  போன்ற  உள்ளூர்  நிறுவனங்களையும் ,  சிறு ட்ராவல்  ஏஜென்சிகளையும்  அழித்து  விடுவார்கள் .  இன்று  இவர்களது   சிறு  இலவசத்திற்கு   ஆசைப்பட்டால்  நாளை  சந்தையில்  அவர்கள்  சொல்வதே  விலையாக  இருக்கும் .
இதே போல் பெப்சி , கோக்  க்கு  போட்டியளிக்கும்  காளி மார்க். சீன  பட்டாசுக்கு  எதிர்த்து  நிற்கும்  சிவகாசி  பட்டாசுகள் , ஆச்சி மசாலா , போன்று  பல   தமிழ் நிறுவனங்கள்

தமிழ்நாடு  தொழில்  அதிபர்களை  ஆதரிப்பதன்  மூலம் நமது  மாநில  பொருளாதாரம்  வலுவடையும் , இங்கு  மேலும்  முதலீடுகள்  நடக்கும் .  மாநில  வாழ்வாதார  பிரச்சனைகள் , இயற்கை  பேரிடர்  போன்றவற்றின்  போது  தமிழராய் ஆதரிப்பார்கள் .

ஜல்லிக்கட்டு தடை  , காவிரி  நீர் கேட்டு  போராடுவது மட்டும் போராட்டம்   அல்ல ,  இதே போன்று தமிழ்  நிறுவனங்களை , தமிழர்  தயாரிக்கும் பொருள்களையும் ,சேவைகளையும்  பயன்  படுத்துவதும்  ஒரு  போராட்டம் தான் . வலுவான  தமிழக  பொருளாதாரத்தை  உருவாக்குவோம் . நாம்  வலுவான  பொருளாதார  சக்தியாக  உருவெடுக்கும் போது , இந்த  தேசம் நம்மை  நிமிர்ந்து  பார்க்கும்  ,நாம்  வைத்ததும்  சட்டம் ஆகும் . இது  பிரிவினை  வாதம்  இல்லை  , தேசத்தை  நம்மை  நோக்கி  திருப்ப  ஒரு  முயற்சி .


நாளைய  போராட்டத்திற்கு  வீதிக்கு  வர வேண்டியதில்லை , வாங்கும்  பொருளிலும் /சேவையிலும் ஒரு  கவனம் இருந்தால்  போதும்.