ஜெயம் ரவி தனி ஒருவன் படத்தில் கூறுவது போல , 6 ம் பக்கத்து பொருளாதார செய்திகள் தான் மற்ற பக்க செய்திகளை தீர்மானிக்கிறது . பொருளாதாரத்தில் சிறந்து இருக்கும் ஜப்பான் போன்ற நாடு அணு ஆயுதம் இல்லாமலே வலிமையான நாடாக இருக்கிறது.
இந்திய நிறுவனங்களை ஏன் ஊக்குவிக்க வேண்டும் ?, வெளிநாட்டு நிறுவனங்கள் ஒரு சந்தையாக மட்டும் பார்க்கும் பொழுது , இந்திய தொழில் நிறுவனர்கள் சந்தையாக மட்டும் பார்க்காமல் ஒரு நாடு என்று ஒரு உணர்வுடன் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை தான் . மேலும் வரும் வருமானத்தை இந்தியாவிலேயே முதலீடு செய்வார்கள் என்ற நம்பிக்கையும்தான் . போர், இயற்கை பேரிடர் போன்ற தருணங்களில் சந்தை கண்ணோட்டம் இல்லாமல் உதவுவார்கள் என்ற நம்பிக்கையும்தான் .
இதே காரணத்திற்காக நாம் நமது மாநிலத்தில் தமிழ் நிறுவனங்களையும் , தமிழ் தொழில் அதிபர்களையும் ஆதரிக்க வேண்டும். உதாரணமாக தமிழ் திரைப்படங்களை பார்த்து தமிழ் திரையுலகத்தை உயிர்ப்பாக வைத்து இருப்பதால் , தமிழ் திரை உலகம் உரிமையோடும் , உணர்வோடும் ஜல்லிக்கட்டு , காவேரி நீர் பிரச்சனை போன்றவற்றிற்க்கு குரல் கொடுக்கின்றனர்.
இத்தகைய குரலை நம் அனைவரும் இந்தி திரைப்படத்தை மட்டும் பார்த்து இருந்தால் ஷாருக் கானிடமோ ,சல்மான்கானிடமோ எதிர் பார்த்து இருக்க முடியாது .
உள்ளூர் அண்ணாச்சியை அழித்து விட்டு , பன்னாட்டு மளிகை கடையில் வாங்க ஆரம்பித்தால் என்ன ஆகும்?, அண்ணாச்சி கடையில் நடப்பது வெறும் வியாபாரம் மட்டும் அல்ல அங்கு ஒரு நட்பு, உறவு, அன்பு எல்லாமே நடக்கிறது , வார்தா புயலின் போது கார்டு வேலை செய்யா விட்டாலும் , ATM ல் இருந்து காசு எடுக்க முடியாவிட்டாலும் உரிமையுடன் அடுத்த வாரம் தருகிறேன் என்று பொருள் வாங்கினோம் மற்ற இடங்களில் முடியுமா ?
இன்னொன்று , போட்டியார்களை வைத்து இருக்கும் பொழுது மட்டுமே வாடிக்கையாளர் சந்தையாக இருக்கும் , போட்டியாளர்களை ஒழித்து விட்டு ஒரே ஆளிடம் இருந்தால் சந்தையில் அவன் சொல்வதே விலையாக இருக்கும்?
இதற்க்காக தர குறைவான பொருளையோ /.சேவையோ வாங்குங்கள் என்று சொல்லவில்லை , இரண்டு பேரிடமும் ஓரே தரமான சேவையோ / பொருளோ தரும் போது , சிறு விலை குறைப்பை பொருட்படுத்தாமல் உள்ளூர் வியாபாரத்தை ஊக்குவிக்க வேண்டும் .
உதாரணங்கள் :-
சென்னையில் பல ஆண்டுகளாக ஒரு தமிழ் நிறுவனமான பாஸ்ட் ட்ராக் வாடகை கார் சேவையை வழங்கி வருகிறது . ஆனால் சர்வதேச நிறுவனமான உபேர் , ஓலா ( பெரும் சர்வதேச முதலீடு) போன்றவை மிக பெரிய விளம்பரத்துடன் , பெரும் முதலீட்டுடன் களம் இறங்கியுள்ளன. இவர்களை போன்றவர்களை கண்முடித்தனமாக ஆதரித்தால் இங்கு உள்ள பாஸ்ட் ட்ராக் போன்ற உள்ளூர் நிறுவனங்களையும் , சிறு ட்ராவல் ஏஜென்சிகளையும் அழித்து விடுவார்கள் . இன்று இவர்களது சிறு இலவசத்திற்கு ஆசைப்பட்டால் நாளை சந்தையில் அவர்கள் சொல்வதே விலையாக இருக்கும் .
இதே போல் பெப்சி , கோக் க்கு போட்டியளிக்கும் காளி மார்க். சீன பட்டாசுக்கு எதிர்த்து நிற்கும் சிவகாசி பட்டாசுகள் , ஆச்சி மசாலா , போன்று பல தமிழ் நிறுவனங்கள்
தமிழ்நாடு தொழில் அதிபர்களை ஆதரிப்பதன் மூலம் நமது மாநில பொருளாதாரம் வலுவடையும் , இங்கு மேலும் முதலீடுகள் நடக்கும் . மாநில வாழ்வாதார பிரச்சனைகள் , இயற்கை பேரிடர் போன்றவற்றின் போது தமிழராய் ஆதரிப்பார்கள் .
ஜல்லிக்கட்டு தடை , காவிரி நீர் கேட்டு போராடுவது மட்டும் போராட்டம் அல்ல , இதே போன்று தமிழ் நிறுவனங்களை , தமிழர் தயாரிக்கும் பொருள்களையும் ,சேவைகளையும் பயன் படுத்துவதும் ஒரு போராட்டம் தான் . வலுவான தமிழக பொருளாதாரத்தை உருவாக்குவோம் . நாம் வலுவான பொருளாதார சக்தியாக உருவெடுக்கும் போது , இந்த தேசம் நம்மை நிமிர்ந்து பார்க்கும் ,நாம் வைத்ததும் சட்டம் ஆகும் . இது பிரிவினை வாதம் இல்லை , தேசத்தை நம்மை நோக்கி திருப்ப ஒரு முயற்சி .
நாளைய போராட்டத்திற்கு வீதிக்கு வர வேண்டியதில்லை , வாங்கும் பொருளிலும் /சேவையிலும் ஒரு கவனம் இருந்தால் போதும்.